மகிழ்ச்சி தரும் க்ளைமாக்ஸ்
இந்த உலகில் இதுவரை வெளியான பெரும்பான்மை திரைப்படங்களுக்கு காதல் என்பது தான் மையக்கரு. பழி வாங்கும் கதை, பேய், திரில்லர், சயின்ஸ்ஃபிக்ஷன் வகையறா என்றாலும் அதற்குள் எப்படியாவது ஒரு காதலைப் புகுத்திவிடுவார்கள். ஏனென்றால் மனிதர்கள் அத்தனை பேரும் காதல் அடிமைகள்.
எல்லா படங்களிலும் காதல் இருக்கிறது என்றாலும், இதுவரை சொல்லப்படாத காதல் க்ளைமாக்ஸ் என்ற வகையில், பார்த்த அத்தனை பேரையும் ரசிக்க வைத்த திரைப்படம், காதலுக்கு மரியாதை.
காதலுக்காக உயிர் கொடுத்தவர்கள், காதலுக்காக உயிர் எடுத்தவர்கள், காதலுக்காக சேர்ந்தே செத்தவர்கள், காதலுக்காக ஓடிப்போனவர்கள், காதலுக்காக பைத்தியம் ஆனவர்கள் என்றெல்லாம் பார்த்த ரசிகர்களுக்கு, முதன்முதலாக காதலுக்காக காதலை தியாகம் செய்த ஜோடியாக ஜீவா – மினியை அறிமுகம் செய்திருக்கிறார் ஃபாசில்.
காதலர்கள் ஒன்று சேர்வார்கள் என்பதை படத்தின் டைட்டிலே சொல்லிவிடுகிறது. ஆனால், இப்படியொரு க்ளைமாக்ஸ் காட்சியை யோசிக்கவும், உள்ளத்தை அள்ளும் வகையில் படமாக்கவும் ஃபாசிலால் மட்டுமே முடியும். எத்தனை முறை பார்த்தாலும் நெஞ்சைத் தொடும் க்ளைமாக்ஸ் காட்சியைப் பார்க்கும் முன்பு, கதையை அவுட்லைன் பார்த்துவிடலாம்.
துப்பாக்கியை கையில் எடுக்காத நடிகர் விஜய்யின் ஆரம்ப காலத் திரைப்படம் என்பதால் நம் பக்கத்து வீட்டுப் பையனைப் போலவே இருப்பார். ஒரு புத்தகக் கடையில் ஷாலினியை சந்திக்கிறார். முதல் சந்திப்பு உயிரை உரசுகிறது. ஷாலினியின் கண்களைப் பார்த்து விஜய் மட்டுமல்ல, அத்தனை ரசிகர்களும் மயங்கத்தான் வேண்டும்.
கண்களால் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் ஷாலினியிடம், “நீ என் மனசுல பெரிய சுமையா இருக்குற. உன்ன பார்த்த நொடியில இருந்தே என் மனசு குத்திக்கிட்டே இருக்கு. நீ விரும்புறனு சொன்னா அந்த வேதனை போய்டும். நீ விரும்பலனு சொன்னா கூட போய்டும். நீ என்ன விரும்புறனு முடிவு பண்ணிடலாமா? விரும்புறியா இல்லையானு” என்று கவித்துவமாகக் கேட்டு சம்மதம் வாங்குகிறார்.
தங்கையிடம் வம்பு செய்கிறார் என்று ஷாலினியின் மூன்று அண்ணன்களும் விஜய்யை அடிக்கிறார்கள். விஜய்யின் தந்தை சிவகுமாரும் இதனால் கோபமாகிறார். கோபத்தில் இருக்கும் குடும்பத்தினர் காதலுக்கு சம்மதம் தர மாட்டார்கள் என்ற எண்ணத்தில் விஜய்யும் ஷாலினியும் நண்பர் சார்லியின் வளர்ப்புத் தந்தையிடம் சரண் அடைகிறார்கள். இவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் பணியில் மணிவண்ணன் தீவிரமாகிறார்.
இந்த நேரத்தில் காதலர்கள் இருவருக்கும் ஏதோ தவறு செய்வதாக உள்ளுணர்வு கூறுகிறது. இத்தனை நாட்களாக பாசம் காட்டி வளர்த்த பெற்றோர்களை காதலுக்காக உதறித்தள்ளுவது சரியா என்ற யோசனை வருகிறது. அதனால் இவரும் ஒருவரையொருவர் பிரியும் முடிவுக்கு வருகிறார்கள்.
இந்த பிரிவுக்கு அர்த்தம் புரியாமல் மணிவண்ணன் விழிக்கிறார். அப்போது ஷாலினி, ‘’ஜீவாவ நான் விட்டுக்கொடுக்குறேன், அவங்க பெத்தவங்களுக்காக. ஜீவா என்னை தாரை வாக்கறாரு, என் குடும்பத்திற்காக..” என்று கண்கள் நிறைய காதலும் கண்ணீருமாகச் சொல்வார். இதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் கட்டாயப்படுத்தவும் முடியாமல் அவர்களை வழியனுப்பி வைக்கிறார் மணிவண்ணன்.
இருவரும் அவரவர் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். இரண்டு குடும்பமும் தங்கள் பிள்ளையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஷாலினிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தகவல் கிடைக்கிறது. திருமணத்திற்கு முன்பாக ஷாலினியின் செயினை திருப்பிக் கொடுத்துவிட நினைக்கிறார் விஜய். இங்கு தான் க்ளைமாக்ஸ் காட்சி ஆரம்பாகிறது.
மினியின் வீட்டு போர்டிகோவில் காரில் இருந்து இறங்குகிறார் சிவகுமார். அவருக்குப் பின் அம்மா ஸ்ரீவித்யா, விஜய், நண்பர்கள் இறங்குகிறார்கள். இவர்களைப் பார்த்தவுடன் குழப்பமும் கோபமும் ஷாலினி அண்ணன்களுக்கு வருகிறது.
நிலைமையைப் புரிந்துகொண்ட சிவகுமார் வாசலில் இருந்தபடியே, ‘’உங்க பொண்ணு செயின் என் பையன்கிட்டே இருக்கு. அதைக் கொடுத்துட்டு மன்னிப்புக் கேட்டுக்கத்தான் வந்தோம்’’’ என்றதுமே வீட்டின் நிலைமை சட்டென தளர்வடைகிறது.
‘’நாங்களும் நடந்ததுக்கு மன்னிப்பு கேட்க நினைச்சோம்…’’ என்று உள்ளே அழைக்கிறார்கள்.
இனி, வாழ்க்கையில் பார்க்கவே முடியாதோ என்று நினைத்த காதலன் வீடு தேடி வந்திருப்பதை அறிந்ததும் ஷாலினியின் கண்களும் உடலும் பரபரக்கிறது. உடல் நடுங்குகிறது.
ஷாலினியின் அம்மா லலிதா, ‘’உங்க பையனை நான் பார்த்ததில்லை’’ என்றதும் விஜய் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறான். அதோடு, ‘’உங்க பொண்ணு மினி எந்தத் தப்பும் செய்யல, நான் தான்’’ என்று தன்னை மட்டும் குற்றவாளியாக காட்டிக் கொள்கிறான். அனைவருக்கும் ஷாலினி குடிப்பதற்குப் பால் கொடுக்கிறாள். ஷாலினியை முதன்முதலாகப் பார்க்கும் சிவகுமாரும் ஸ்ரீவித்யாவும் தர்மசங்கடத்துடன் தவிக்கிறார்கள்.
யாருக்கும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் போகவே, ‘’கிளம்புகிறோம்’’ என்கிறார் சிவகுமார். அனைவரும் எழுகிறார்கள்.
இங்கு தான் ஃபாசில் உள்ளத்தைத் தொடும் ஒரு டயலாக் வைக்கிறார். ‘’இத்தனை தூரம் வந்துட்டு கல்யாணப் பொண்ணை ஆசிர்வாதம் பண்ணாமப் போறீங்களே…’’ என்று ஷாலினியின் அம்மா லலிதா ஆற்றாமையுடன் கேட்கிறார்.
ஏற்கெனவே அழுதுவிடும் நிலையில் இருக்கும் ஸ்ரீவித்யா கண்கள் கலங்க ஷாலினியைப் பார்க்கிறார். ஆசிர்வாதம் பண்ண முடியாமல் விம்மலை அடக்கிக்கொண்டு, ‘’என்ன சொல்லிம்மா ஆசிர்வாதம் பண்ணச் சொல்றீங்க. இவ எங்க வீட்டு மருமக.. இவளை என்கிட்டே குடுத்துடுங்க. நாங்க கண்ணுக்குள்ளே வச்சுப் பார்த்துக்கிடுறோம்’’ என்று கதறி அழுகிறாள்.
அதைக் கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்கிறது. சிவகுமார் மிகுந்த தயக்கத்துடன், ‘’என்னம்மா…’’ என்று கேட்க, ‘’என்னால இவளை விட நல்ல பொண்ணு பார்க்க முடியாதுங்க’’ என்கிறார்.
யாரும் எதுவும் பேச முடியாமல் தவிக்கும் நேரத்தில் அம்மா லலிதாவே அடுத்த அடியும் எடுத்துக் கொடுக்கிறார். ‘’கூட்டிட்டுப் போங்க. யார் வேணாம்னு சொன்னா. அவளோட ஜீவாவை அவகிட்டே குடுத்துடுங்க’’ என்று விட்டுக்கொடுக்கிறார்.
அம்மா சொன்னதன் முழு அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாத அண்ணன்கள், ‘’அம்மா… நீங்க என்ன சொல்றீங்க..?’’ என்று தடுமாற, ‘’டேய்… அவ உள்ளுக்குள்ள ஜீவாவை வைச்சிக்கிட்டு நமக்காக சிரிச்சிக்கிட்டு நடிக்கிறா… அவ எத்தனை வேதனையில இருக்கான்னு எனக்குத் தான் தெரியும்… அவளை அவளோட ஜீவாகிட்டே குடுத்துடுங்கடா…’’ என்கிறார். அம்மாவின் பேச்சைக் கேட்டதும் ஷாலினி கண்கள் கலங்க அம்மாவைக் கட்டிக்கொள்கிறாள். விஜய் கண்கள் கலங்குகிறது. அண்ணன்களும் சம்மதத்துடன் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.
இவர்கள் எப்படியாவது ஒன்று சேர வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் ஒவ்வொரு ரசிகரும் இந்த திருப்பத்தைக் கண்டு கண் கலங்குகிறார்கள். அடுத்து நடப்பது வழக்கமான ஒன்று கூடல். ஆனால், இந்த 10 நிமிடத்தில் இளையராஜாவின் இசை நம்மை அழவைக்கிறது, ஆனந்தப்பட வைக்கிறது. ஒரு காதலை பெற்றோரை விட அதுவும் ஒரு தாயை விட வேறு யாராலும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதை சொன்ன படம் காதலுக்கு மரியாதை.
மீண்டும் ஒரு முறை இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் பாருங்கள். ஷாலினியும் ஸ்ரீவித்யாவும் உங்கள் கண்களில் கண்ணீர் வரவழைப்பார்கள். இது தான் உசுரை உருக்கும் க்ளைமாக்ஸ்.
மீண்டும் ஒரு நல்ல க்ளைமாக்ஸ் காட்சியுடன் சந்திப்போம்.