புகார் மனு கொடுத்தவர்களுக்கு மரியாதை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 131

மாநகராட்சி அலுவலகத்திற்கு தினமும் வரத்தொடங்கிய மேயர் சைதை துரைசாமி அலுவலர்களிடம், ’பொதுமக்களிடம் வாங்கிய புகார் மனுக்களை பதிவு செய்து, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல்கள் வேண்டும்’ என்று கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

அது வரையிலும் புகர் மனுக்களை பதிவு செய்யும் நடைமுறையே இல்லை என்பதால், எந்த பதிலும் சொல்லாமல் விழித்தார்கள். அவர்களுடைய தடுமாற்றத்தைக் கண்டதுமே நிலவரத்தைப் புரிந்துகொண்டார். எனவே, அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டு ஆவேசப்படாமல், ‘’பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா?’’ என்று கேட்டார்.

நல்லவேளையாக, அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள். அதனால் நிம்மதி அடைந்த சைதை துரைசாமி, ‘’நல்லது. அனைத்து மனுக்களையும் பதிவு செய்யும் புதிய நடைமுறையை உடனடியாக நாம் தொடங்கிவிடலாம். அவற்றை முறையாகப் பதிவு செய்து, ஒவ்வொரு புகாருக்கும் ஒரு நம்பர் வழங்கி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்’ என்று வழி காட்டினார். அதன்படி உடனடியாக மனுக்கள் பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டது.

புகார் மனுக்கள் கொடுத்த பொதுமக்களுக்கு, ‘தங்களுடைய புகார் மனு பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பதில் அனுப்பும் நடைமுறையும் தொடங்கப்பட்டது.

பொதுவாக மாநகராட்சிக்கு புகார் அனுப்பியவர்கள், அந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதிகாரிகள் கைக்குக் கிடைத்ததா இல்லையா என்றெல்லாம் குழப்பத்தில் இருப்பார்கள். இந்த சூழலில், புகார் மனு கொடுத்தவர்களுக்கு நம்பிக்கையும், மரியாதையும்கொடுக்கும் வகையில், பதிவு செய்யப்பட்டதாக மாநகராட்சியில் இருந்து பதில் கிடைத்ததையே ஆச்சர்யமாகப் பாராட்டினார்கள். தங்கள் கோரிக்கையைக் கேட்பதற்கு மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி இருக்கிறார் என்ற நம்பிக்கை மக்களுக்குக் கிடைத்தது.  

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment