கூவம் நதிக்கரை மக்களுக்கு மறுகுடியமர்வு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 369

சென்னையில் கூவம் நதியைக் கடக்கையில் மூக்கையும் முகத்தையும் மூடியபடி கடக்கும் மனிதர்களே அநேகம். அந்த கூவம் நதிக்கரையில் மனிதர்கள் நீண்ட காலமாக குடியிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி மிகவும் கவனமாக இருந்தார்.

வேறு போக்கிடம் இல்லாத காரணத்தாலே, மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத அந்த இடத்தை தேர்வு செய்து அங்கு அந்த பாவப்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். ஆரம்ப காலத்திலேயே அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். தாமதமான நடவடிக்கை என்றாலும், இப்போதாவது அந்த மக்களை பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்த வேண்டியது மிகவும் அவசியம் என்பதை மேயர் சைதை துரைசாமி உணர்ந்தார்.

அந்த மக்கள் அந்த இடத்தை விட்டுப் பிரிய விரும்ப மாட்டார்கள் என்றாலும், அவர்களை தொடர்ந்து கூவம் கரையில் வசிக்க வைப்பது மனிதாபிமானமற்ற செயல். எனவே, அவர்களுக்கு மறுவாழ்வு தருவதை உறுதி அளித்தார் மேயர் சைதை துரைசாமி.

சென்னை மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘’தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம்  கூவம் நதி கரையோரம் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்பு  செய்துள்ள  சுமார் 14257 குடிசைப் பகுதி குடும்பங்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பெரும்பாக்கம் திட்டப் பகுதியில் மற்றும் திருமழிசை கூம்பாக்கம் குடியிருப்புகள்  கட்டப்பட்டு உள்ளது. இதன் பணித் தொகை ரூ.1223.60 கோடியாகும்.

இதில் 202 குடிசைப் பகுதி குடும்பங்கள் பெரும்பாக்கம் திட்டப் பகுதியிலும், 195 குடிசைப் பகுதி குடும்பங்கள் திருமழிசை கூம்பாக்கம் திட்டப் பகுதியிலும் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மீதமுள்ள குடும்பங்களை மறு குடியமர்வு செய்யவும்  பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பொதுப் பணித் துறையுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது…’’ என்று தெரிவித்தார் மேயர் சைதை துரைசாமி.

இந்த அறிவிப்புக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை என்ற பாராட்டு மேயர் சைதை துரைசாமிக்கு அத்தனை பக்கத்திலிருந்தும் கிடைத்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment