என்ன செய்தார் சைதை துரைசாமி – 289
ஒரு வீட்டின் ஆரோக்கியம், சுகாதாரத்தை கிச்சன், டாய்லட் பராமரிப்பைப் பார்த்து அறிந்துகொள்ளலாம். அதே போல் ஒரு நகரத்தின் தூய்மையையும், நிர்வாகத்தையும் குப்பைத் தொட்டிகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன என்பதை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.
ரோடுகளில் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்து கீழே சிதறிக் கிடப்பது, ஒதுக்குப்புறங்களில் குவிக்கப்படும் குப்பைகள், உடைந்த குப்பைத் தொட்டிகள் பற்றி பெரும்பாலோர் கண்டுகொள்வதே இல்லை. இப்படித்தான் கிடக்கும் என்று இந்த சீர்கேட்டை கண்டுகொள்ளாமல் நகரும் அளவுக்கு மக்கள் பழகிவிட்டார்கள். வீடு சுத்தமாக இருந்தால் போதும் என்று ரோட்டில் போகிற போக்கில் குப்பையைத் தூக்கி வீசுபவர்களே அதிகம். பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், அதிகாரிகளும் இந்த விஷயத்தில் அசட்டையாகவே நடந்துகொண்டார்கள்.
குப்பை மேலாண்மைக்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய மாநகர அதிகாரிகள், தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும் குப்பைத் தொட்டியைப் பார்த்தால் முகம் திருப்பிக் கொள்வது, குப்பைக் கிடங்குப் பக்கம் செல்கையில் மூக்கை மூடிக்கொள்வது என்ற அளவுக்கு நடந்துகொண்டார்கள். இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் மத்தியில், குப்பைக் கிடங்கிற்குள் கால் பதித்து ஆய்வு செய்த ஒரே தலைவர் என்றால், அது மேயர் சைதை துரைசாமி மட்டும் தான்.
மேயர் தேர்தல் வேட்பாளராக சைதை துரைசாமியை நிறுத்திய அன்றைய முதல்வர் ஜெயலலிதா, ‘சுத்தமான சென்னையை, கை சுத்தமான நிர்வாகத்தை உங்களுக்கு வழங்குவேன்’ என்று வாக்குறுதி அளித்தார். மக்களும் அந்த வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் சைதை துரைசாமிக்கு மாபெரும் வெற்றியைப் பரிசாகக் கொடுத்தார்கள். தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்குக் கொடுத்த, ‘சுத்தமான சென்னை…’ என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு மேயர் சைதை துரைசாமி எந்த அளவுக்கு இறங்கிப் பணியாற்றினார் தெரியுமா?
- நாளை பார்க்கலாம்.