என்ன செய்தார் சைதை துரைசாமி – 274
பெருநகர சென்னை மாநகராட்சி குத்தகையில் எக்கச்சக்க முறைகேடுகள் நடப்பதாக மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்ததும், அதிரடி நடவடிக்கை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டார். இன்றைய பதிவேடுகளைக் கொண்டு ஆய்வு செய்யாமல், 10 வருடங்களுக்கு முந்தைய பதிவேடுகளை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டார்.
மேயர் சைதை துரைசாமிக்கு வந்த தகவல் உண்மை என்பது தெரியவந்தது. பெரும் புகழுடன் திகழும் கல்வி நிலையங்கள், செல்வாக்குடன் இருக்கும் வி.ஐ.பி.கள் பலரும் அரசு சொத்தை குத்தகை என்ற பெயரில் அனுபவித்துவருவது தெரியவந்தது. இதில் தகுதி இல்லாமல் குத்தகை கொடுக்கப்பட்டவைகளை மீட்கும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
முக்கிய நபர்களுக்கு குத்தகை கொடுக்கப்பட்டதை மீட்கும் முயற்சியில் இறங்கினால், அவர்கள் மேலிடம் வரை சென்று உங்களுக்கு சிக்கல் உருவாக்குவார்கள், எனவே முக்கியப் புள்ளிகள் விவகாரத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் என்று அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தார்கள். உடனே மேயர் சைதை துரைசாமி, ‘இந்த பட்டியலை நான் அப்படியே முதல்வருக்குக் கொடுத்துவிடுவேன், முதல்வரின் உத்தரவு பெற்று பொதுமக்களிடமும் தெரிவித்துவிடுவேன். ஆகவே, தகுதியற்ற குத்தகையை உடனே மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்’ என்று ஆவேசம் காட்டினார்.
எந்த ஒரு விஷயம் என்றாலும் நேரடியாக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிவிடுவார் என்பதால் அதிகாரிகள் மேயர் இட்ட பணியை செய்யத் தொடங்கினார்கள். முக்கியப் புள்ளிகளும் எதிர்ப்பு காட்டாமல் பணிந்து போனார்கள். குத்தகைக்கு விடப்பட்ட நிலம் மீட்கப்பட்ட நடவடிக்கை மேயர் சைதை துரைசாமி காலத்தில் மட்டுமே நடந்தன. யாரும் கண்டுகொள்ளாத குத்தகை விஷயத்திலும் அக்கறை காட்டி சாதனை படைத்தார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.