என்ன செய்தார் சைதை துரைசாமி – 153
மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டில் பாடம் படிப்பதற்கு உகந்த சூழல் இல்லை என்றால், அதனை ஏற்படுத்தித் தர வேண்டியது மாநகராட்சியின் கடமை என்று கருதினார் மேயர் சைதை துரைசாமி. எனவே, மாணவர் நலனை மட்டும் சிந்தித்து மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு தங்கும் விடுதி அமைப்பதற்குத் திட்டம் தீட்டினார்.
தகுதியும் திறமையும் உள்ள மாணவர்கள் அனைவரும் பிறருடன் போட்டியிட்டு நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காகவே தங்கும் விடுதி எனும் கனவுத் திட்டத்தை உருவாக்கினார். இந்தத் திட்டத்தினால் நிதிச்சுமை, பணிச்சுமை என்று நிறைய எதிர்ப்பு கிளம்பியது. எனவே, இதனை முதலில் பரீட்சார்த்த ரீதியில் செயல்படுத்திப் பார்க்க முன்வந்தார் சைதை துரைசாமி.
அதன் படி சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளி, பச்சையப்பன் கல்லூரி அருகிலுள்ள சுப்பராயன் தெரு, மாநகராட்சிப் பள்ளி என இரண்டு பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு தங்கும் விடுதி அமைக்கப்பட்டன. இந்த மாணவர் விடுதியில் 60 மாணவர்கள் தங்கிப் படிப்பதற்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டன. குடிசைகளில் வசிக்கும் மாணவர்களும் வீட்டில் போதிய வசதி இல்லாத மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு உணவு வசதியும் செய்து தரப்பட்டன. இங்கு தங்கும் மாணவர்கள் வாரம் ஒரு நாள் மட்டும் வீட்டுக்குச் சென்று வருவதற்கு அனுமதி தரப்பட்டன.
மேயர் சைதை துரைசாமியின் கனவுத் திட்டமான தங்கும் விடுதியில் தங்கிப் படித்த 60 மாணவர்களும் +2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்று நூற்றுக்கு நூறு சதவீதம் என்ற சாதனை படைத்தார்கள். அவர்களில் ஒரு மாணவன் ஒரு பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெற்று அனைவரது பாராட்டையும் பெற்றான். இது விளிம்பு நிலை மாணவனின் மகத்தான சாதனை என்றுதான் சொல்லவேண்டும். இந்தத் திட்டம் வெற்றி அடைந்ததை அடுத்து, சென்னை மாநகரம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
- நாளை பார்க்கலாம்.