பேருந்து நிழற்குடையில் மீட்கப்பட்ட உரிமை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 254

முன்பு பெரும்பாலான பேருந்து நிழற்குடைகள் எம்.டி.சி. எனப்படும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் வசமும் குறைந்த எண்ணிக்கையிலான நிழற்குடைகள் மட்டுமே சென்னை மாநகராட்சி வசமும் இருந்தன. அதனால் எம்.டி.சி. நிறுவனம் பெரும்பாலான நிழற்குடைகளை விளம்பரதாரர்களிடம் ஒப்படைத்து, பேருந்து நிழற்குடைகளில் இருந்து வருமானம் ஈட்டிவந்தது. நீதிமன்றத்தில் மாநகராட்சிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த பிறகும் அதற்கான உரிமை கோரப்படவில்லை.

மேயராக சைதை துரைசாமி பதவிக்கு வந்ததும் இந்த தகவல் அவருக்குத் தெரியவந்தது. பேருந்து நிழற்குடை குறித்து முழு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகள், ‘’நீதிமன்றத்தில் எம்.டி.சி. நிறுவனமும் விளம்பரதாரர்களும் வெளியே பேசிக்கொள்வதாகச் சொல்லிவிட்டார்கள். எனவே, இனிமேல் இந்த விஷயத்தை நாம் கையில் எடுப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்றே சொன்னார்கள்.

ஆனால், மேயர் சைதை துரைசாமி அப்படியே விடுவதாக இல்லை. மாநகராட்சி இழந்த உரிமையை மீண்டும் பெற வேண்டும் என்று விரும்பினார். இதற்கு மேல்முறையீடு செய்வதற்கு உத்தரவு போட்டார். அப்போதும், இது தேவையில்லாத விஷயம் என்றே பலரும் கருதினார்கள்.

ஆனால், மேயர் சைதை துரைசாமி எதிர்பார்த்ததே நடந்தது. ஆம், மேல்முறையீட்டில் சென்னை மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அப்போது, ‘’சென்னை மாநகராட்சி முழுவதும் பேருந்து நிழற்குடை அமைத்ததில் மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தால், சென்னை மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று  தீர்ப்பு வந்தது.

மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுவதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மேயர் சைதை துரைசாமி ஆணையருக்கு குறிப்பு அனுப்பினார்.  மேயர் சைதை துரைசாமியின் துணிச்சலான நடவடிக்கையை அடுத்தே இழந்த உரிமை மீட்கப்பட்டது. இதையடுத்து நிழற்குடையில் செய்யப்படும் விளம்பர வருமானம் மாநகராட்சிக்கும் கிடைக்கத் தொடங்கியது. வேறு ஒருவர் மேயராக வந்திருந்தால் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி மேல் முறையீடு வரை போயிருக்கவே மாட்டார்கள் என்பதாலே அதிகாரிகள் இன்றும் சைதை துரைசாமியைப் பாராட்டி வருகிறார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment