என்ன செய்தார் சைதை துரைசாமி – 242
பாதசாரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பெருநகர சென்னையில் முதன்முதலாக உலகத்தரத்திற்கு நடைபாதைகள் அமைக்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி முதியோர்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ மாணவியர் வசதிக்கு ஏற்ப நடைபாதை மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன. இந்த நேரத்தில் ஒரு புதிய சவாலான பிரச்னை மேயர் சைதை துரைசாமி முன் வந்தது.
அதாவது சாலையோரத்தில் அமைந்திருக்கும் வீடுகள் மற்றும் நிறுவனங்களின் வாசலில் வாகனங்கள் செல்வதற்கு ஏற்ப சாய்தள நடைமேடை அமைக்க வேண்டிய அவசியம் எழுந்தது. பெரிய நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்கள் அவர்களுடைய சொந்த செலவில் இந்த சாய்தள நடைமேடை அமைத்துக்கொள்வதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால், நிறைய ஏழை, எளிய மக்களின் வீடுகள் இருந்தன. அவர்களால் தரமான நடைபாதை அமைப்பதற்கு செலவு செய்ய முடியாது என்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது.
ஒவ்வொரு நபர்களும் அவர்களுக்கு ஏற்ற வகையில் சாய்தள நடைபாதை அமைத்துக்கொண்டால் அது பாதசாரிகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்றதாக இருக்காது என்பதும் மேயர் சைதை துரைசாமிக்குப் புரிந்தது. எனவே, அனைத்து சாலைகளில் இருக்கும் கட்டிட முகப்புகளில் வாகனங்கள் வந்து, செல்வதற்கு வசதியாக சென்னை மாநகராட்சி செலவிலேயே சாய்தள நடைமேடை அமைப்பதற்கு உத்தரவு போட்டார்.
சாலை போடுவது மட்டும் தான் மாநகராட்சியின் வேலை, அதனை வீட்டுடன் இணைத்துக்கொள்ளும் படி நடைபாதை அமைப்பது கட்டிட உரிமையாளர்களின் வேலை என்ற நிலையை மாற்றியவர் மேயர் சைதை துரைசாமி. இதனால் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் எல்லாமே ஒரே மாதிரி வசதியுடன் அமைந்தன. இதனால், வீட்டு உரிமையாளர்களால் தெருவில் ஆக்கிரமிப்பு செய்ய முடியாத நிலையும் உருவானது. ஏனென்றால், அவர்களே சொந்த செலவில் சாய்தள மேடை அமைக்கும்போது அக்கம்பக்கத்து இடத்தையும் சேர்த்து அமைத்துக் கொள்வார்கள். இந்த நிலையை மாற்றி சீரான புதிய சாலைகள் அமைத்துக் காட்டினார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.