• Home
  • அரசியல்
  • துரைமுருகனிடம் ரஜினிகாந்த் டோட்டல் சரண்டர்

துரைமுருகனிடம் ரஜினிகாந்த் டோட்டல் சரண்டர்

Image

அம்புட்டுத்தான் வீரமா தலைவா..?

கருணாநிதி, ஜெயலலிதா மேடைகளில் ஏறி தைரியமாக தன்னுடைய கருத்துக்களை வைப்பதற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தயங்கியதே இல்லை. இந்த நிலையில் துரைமுருகன் விவகாரத்தில் டோட்டலாக சரண்டர் ஆகியிருப்பது அவரது ரசிகர்களை வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.

எ.வ.வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘’பழைய மாணவர்களை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துவது ரொம்பவே கஷ்டம். அதுவும் துரைமுருகன் இருக்கிறாரே… நாம் ஏதாவது தெரிவித்தால், சந்தோஷம் என்பார். அது நல்ல விஷயம் என்று சொல்கிறாரா, பிடிக்காமல் சொல்கிறாரா என்றெல்லாம் கண்டுபிடிக்கவே முடியாது. இவர்களே இடத்தைப் பிடித்துக்கொண்டு இருப்பதால், வேறு யாரும் வரமுடியவில்லை’’ என்று சீனியர் ஜூனியர் பஞ்சாயத்து குறித்து ஜாலியாகப் பேசினார்.

இந்த விவகாரம் குறித்து துரைமுருகனிடம் கேட்டதற்கு, ‘மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி, பல் விழுந்து, தாடி வளர்த்த நிலையில் கூட நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை” என தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுத்தார்.

இது தொடர்பாக இன்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த், “அவர் (துரைமுருகன்) மிகப் பெரிய தலைவர், என் நீண்டகால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை. எங்கள் நட்பு நீடிக்கும்.” என்று கூறினார்.

ரஜினி சரண்டர் ஆன விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டதற்கு, “அதையேத்தான் நானும் சொல்கிறேன். எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாகப் பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும்போல் நண்பர்களாகவே இருப்போம்” என்று கூறியிருக்கிறார்.

பஞ்சாயத்து முடிந்துவிட்டது போன்று இருந்தாலும், இரண்டு பக்கமும் புகைச்சல் இருக்கிறது. ரஜினி இப்படியெல்லாம் பல்டி அடிக்கவேண்டிய அவசியமே இல்லை. இம்புட்டுத்தான் வீரமா தலைவா என்று ரஜினி ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.

Leave a Comment