டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா, சிவகங்கை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வயிறு வலி பிரச்னைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியிருக்கிறார். மருத்துவமனையில் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்து விளக்குகிறார் மருத்துவர்.

கடந்த 2011ம் ஆண்டு முதல் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவினால் அவதிப்படுக்றார். ’ராணா’ படத்தின் இடையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று திரும்பினார். அடுத்து 2016ம் ஆண்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். இந்த தருணங்களில் அவரது சிகிச்சை குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
2020ம் ஆண்டு கட்சி தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், கொரோனா பரவல் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அப்போது உடல் நலத்தைக் காரணம் காட்டியே கட்சி தொடங்குவதிலிருந்து பின்வாங்கினார். அப்போது, “2011ஆம் ஆண்டு எனக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டு அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்” என்று ஓர் அறிக்கை வெளியானது.
இந்த விஷயங்கள் உண்மை என்று கூறிய ரஜினிகாந்த், ‘வயது 70. மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு எனவே கொரோனா காலத்தில் மக்களை தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்’ என்று அறிக்கை வெளியிட்டார். கட்சி தொடங்கவில்லை என்றாலும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை அவர் வழக்கம் போல் செய்துகொண்டு தான் இருக்கிறார்.
ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகயிருக்கும் நிலையில் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார். இதயவியல் நிபுணரான மருத்துவர் சாய் சதீஷ் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு ரஜினிகாந்திற்கு சிகிச்சை அளித்தனர். ரஜினிக்கு ரத்தக் குழாய்க்குள் அனுப்பப்பட்ட சிறு குழாய் மூலம் (கேதீட்டர்) வீக்கம் ஏற்பட்டிருந்த பகுதியில் ஒரு ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டிருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியானது.
இந்த சிகிச்சை குறித்து சிவகங்கை பொது மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டோம். ‘’ரஜினிகாந்திற்கு இதயத்தில் இருந்து உடல் முழுமைக்கும் தூய ரத்தத்தைக் கொண்டு செல்லும் “அயோர்ட்டா” எனும் மகா தமனியில் அனியூரிசம் எனும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அனியூரிசம் என்பது தமனியின் சுவர்களில் தளர்ச்சி ஏற்படுவதால் ரத்த ஓட்ட அழுத்த மிகுதியால் புடைப்பு அல்லது வீக்கம் ஏற்படுகிறது. இதன் விளைவாக அதீத ரத்த அழுத்தத்தின் காரணமாக அந்த பாதிப்புக்குள்ளான வீக்கம் ஏற்பட்ட பகுதியில் பிளவுற்று ரத்தப் போக்கு ஏற்படலாம். ரஜினிக்கு படப்பிடிப்பின் போது இந்த அநியூரிசத்தின் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அதற்காக உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ரத்த நாளம் வழியாக கேதிடர் எனும் வளைந்து கொடுக்கும் குழாய் போன்ற கருவியை உள்செலுத்தி மகா தமனியில் வீக்கம் ஏற்பட்டுள்ள பகுதிக்கு கேதிடரை கொண்டு சென்று, அங்கு ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் வழியாக அநியூரிசம் ஏற்பட்டுள்ள பாதிப்புக்குள்ளான பகுதியில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள ஸ்டென்ட் புகுத்தப்பட்டு பாதிப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு TEVAR என்று பெயர். THORACIC ENDOVASCULAR AORTIC REPAIR. சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் நல்ல உடல்நிலையுடன் வீடு திரும்பியிருப்பதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது’’ என்று தெரிவித்தார்.
இதயத்திலிருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் பிரதான ரத்தக் குழாயான aorta-வில் சில சமயங்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு. இந்த வீக்கம் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்றாலும், பெரும்பாலும் வயிற்றுப் பகுதியிலோ நெஞ்சுப் பகுதியிலோதான் ஏற்படும். வயிற்றுப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டால் அது Abdominal Aortic Aneurysm என்றும் நெஞ்சகப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டால் அது Thoracic Aortic Aneurysm என்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்த வீக்கத்தை அப்படியே விட்டுவிட்டால், ரத்தக் குழாய் வெடித்து உயிருக்கு ஆபத்தாக முடியலாம். ஆனால், முன்கூட்டியே சிகிச்சை அளிக்கப்படும் பட்சத்தில், பெரிய பிரச்னையின்றி வாழ்வைத் தொடர முடியும். உயர் ரத்த அழுத்தம், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவது, புகைபிடிக்கும் பழக்கம் என இந்தப் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கிறார்கள்.
நலமுடன் வாழட்டும்.