பொருளாதார நிமித்தம் வேறு ஊர், வேறு நாட்டுக்கு நகர்ந்து செல்வது வேறு. இருவரும் புதிய சூழலுக்கு ஏற்ப மாற வேண்டிய கட்டாயத்தினால் மாறிக்கொள்வார்கள். ஆனால், ஒரே ஊருக்குள் என்றால் திருமணம் முடித்ததும் கணவனும் மனைவியும் புதுக்குடித்தனம் நகர்வது சரியான தீர்வாக இருக்காது.
உணவு முறை, வாழ்க்கை முறை போன்றவை இரண்டு குடும்பத்திலும் வெவ்வேறாக இருக்கும். அவற்றை எல்லாம் ஓரளவு இருவரும் புரிந்துகொண்டு அதன்பிறகு ஒருவருக்கொருவரின் முன்னுரிமை என்ன என்பதையும் அறிந்த பிறகு தனியே செல்வதே நல்ல தீர்வு. அப்படியின்றி கல்யாணம் முடித்தவுடன் புதுக்குடித்தனம் போகிறார்கள் என்றால், நடுவர் இல்லாத பட்டிமன்றம் போல் தம்பதியர் கட்டி உருளவே வாய்ப்பு அதிகம். திருமண வயதை அதிகரிப்பதாலும் இந்த பிரச்னையைத் தீர்த்துவிட முடியாது. மனிதனின் இயல்பை தெரிந்துகொள்வதும், மாமியார் குறித்த மாய பிம்பங்களை உடைப்பதும்தான் திருமண பந்தம் வெற்றி அடைவதற்கான வழி.
பொதுவாக கூடி வாழ்வதுதான் மனிதனின் இயல்பு. தனியாக எந்த ஒரு மனிதனாலும் வாழ முடியாது. அதனால்தான் கொடூர குற்றம் செய்பவருக்கு தனிமை சிறை தண்டனை கொடுக்கிறார்கள்.. மிருகம் போல் மனிதனால் தனியனாக வாழமுடியாது. ஏனென்றால் மிருகங்களின் தேவை உணவு மட்டும்தான். ஆனால் மனிதனின் தேவைகள் ஆயிரக்கணக்கானவை. அதனால் ஒவ்வொரு வசதிக்காகவும் ஒருவரையொருவர் சார்ந்துதான் வாழவேண்டும். அது, சொந்தமாகவே இருக்கட்டுமே.