ரயிலுக்காக காத்திருக்கிறீர்கள். தாமதமாக வரும் என தெரியவருகிறது. உங்களால் அங்கே எதுவும் செய்யமுடியாது என்ற உண்மை புரியவேண்டும். இன்னமும் ரயில் வரவில்லையே என்று கடிகாரம் பார்த்துப்பார்த்து டென்ஷன் ஆவதைவிடுத்து, இன்று கூடுதலாக கொஞ்சநேரம் பிளாட்ஃபாரத்தில் இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று அக்கம்பக்கத்து பயணிகளை பார்த்து ரசிக்க முடியும்.
ஊரில் இருந்து வீட்டுக்கு வரும் உறவினர் பஸ் ஏறிவிட்டதாக போன் செய்து ஒரு மணி நேரம் ஆனதால், ரோட்டிற்கும் வீட்டுக்கும் அலைவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ரோடு வரை வந்தவர் நிச்சயம் வீட்டுக்கும் வரத்தான் செய்வார். அந்த நேரத்தில் உறவினருக்குத் தேவையான எதையாவது தயார் செய்துவைக்கலாமா என்று யோசிக்க வேண்டுமே தவிர, வீணாக டென்ஷன் ஆவதில் பிரயோஜனமில்லை.
மூன்றாம் மாடியில் இருந்து முதல் மாடிக்கு லிஃப்ட் வருவதற்குள் முப்பது முறை பட்டனை அழுத்தும் ஆசாமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு முறை அழுத்தினாலும் முப்பது முறை அழுத்தினாலும் விளைவு ஒன்றுதானே… காத்திருக்கும் பொறுமை இல்லையென்றால் மனம் எரிச்சல் அடையும். மனம் குப்பையாகும்போது ஜீரண சக்தி குளறுபடியாகும். ஜீரணம் சிக்கலானால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் பிரச்னை ஏற்படவே செய்யும். எனவே, காத்திருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாதவண்ணம் ஒரு நல்ல அனுபவத்திற்காக மட்டுமே காத்திருக்க வேண்டும்.
ஏனென்றால் காத்திருக்கிறோம் என்ற எண்ணமே தீவிரமான மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். உங்களால் எதுவும் செய்யமுடியாத நேரத்தில் அமைதியாக வேடிக்கை பாருங்கள், வாழ்க்கை சுவாரஸ்யமாகிவிடும். எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளும் ஏகாந்த நிலையை மனம் பெற்றுவிடும். அதனால் காத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்.