ஞானகுரு ;
இரண்டுமே கனவுதான். ஆனால் லட்சியம் என்பது ஒவ்வொரு மனிதரிடமும் ஒன்று அல்லது இரண்டுதான் இருக்கும். மேலும் எளிதில் கிடைக்காத ஒன்றுதான் லட்சியமாக இருக்கும். ஆனால் எண்ணிக்கையில் அடங்காத ஆசை மனிதர்களுக்கு உண்டு. காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரையிலும் நிமிடத்திற்கு நிமிடம் ஆசைகள் உருவாகிக்கொண்டே இருக்கும். எதிர்பார்ப்புகளுக்கு எவ்விதமான தகுதிகளும் தேவை இல்லை என்பதால் பரிட்சை எழுதாத ஒருவன் கூட, பாஸாக வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.
பொருட்காட்சியில் ஆசையுடன் ஒரு பொருள் வாங்கியபிறகு, மற்றொரு கடையில் வேறு ஒரு பொருளை பார்த்ததும், கையில் இருப்பதை தூக்கியெற்ந்து அந்த பொருளுக்கு ஆசைப்பட்டு ஏங்கியழும் பிள்ளைகளை பார்த்திருப்பீர்கள். அந்தக் குழந்தைகளிடம் இருப்பதைப் போன்ற ஆசைகள்தான் மனிதர்கள் மனதில் மண்டிக் கிடக்கின்றன. ஒரு லட்சியம் நிறைவேற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் ஆசைகளுக்கு அந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. அதனால் ஒவ்வொரு மனிதனிடமும் ஏகப்பட்ட ஆசைகள் கொட்டிக்கிடக்கின்றன. லட்சியத்தைப் போன்று ஒவ்வொரு ஆசைகளும் ஏதேனும் ஒரு வகையில் துன்பம் தருவதாகவே இருக்கும் என்பது மட்டும் முழு உண்மை.