ஞானகுரு :
உண்மையில் இது கண்டம்விட்டு கண்டம் வந்திருக்கும் கர்ண பரம்பரைக் கதை. ரோமானியாவில் வாழ்ந்த கிறிஸ்தவ பாதிரி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையில் இருந்து தப்புவதற்கு ஒரு மார்க்கமும் சொல்லப்பட்டது. உலகம் வியக்கும்வண்ணம் அற்புதமான ஒரு புத்தகத்தை ஒரே இரவில் எழுதினால் விடுதலை கிடைக்கும் என்று சொன்னார்கள்.
வேகவேகமாக எழுத தொடங்கினாலும் பக்கங்கள் நிரம்பவில்லை. அதனால் கடவுளை அழைத்து உதவி கேட்டாராம். கடவுள் வரவில்லை. அடுத்து சாத்தானை அழைத்தாராம். உடனே இறங்கிவந்த சாத்தான், அவருக்காக ஒரே இரவில் எழுதிக்கொடுத்ததுதான் கோடெக்ஸ் கிகாஸ் எனப்படும் வேதம். இப்போதும் ஸ்வீடன் நாட்டில் இந்தப் புத்தகம் இருக்கிறது. சாத்தானால் எழுதப்பட்ட வேதத்திற்கும் கடவுள் அருளிய வேதத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதுதான் ஆச்சர்யம்.
இன்று தகுதியில்லாத நபர்கள் அறிவுரை சொல்வதையே சாத்தான் வேதம் ஓதுகிறது என்கிறார்கள். அப்படிப்பார்த்தால், இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதனுக்கும் அறிவுரை சொல்வதற்கு தகுதி இல்லை. ஏனென்றால் எல்லா மனிதர்களும் ஒரு வகையில் கடவுள் என்றால், இன்னொரு வகையில் சாத்தான்.