ஞானகுரு ;
ஆனந்தமாக சுற்றுலா செல்வது நிச்சயம் நல்ல ஓய்வுதான். ஆனால் ஒரே நாளில் எட்டு இடங்களை சுற்றிப்பார்த்து, அத்தனையையும் பார்த்துவிட்டேன் என்று சொல்லிக்கொள்வதால் மனதிற்கு நிம்மதியும் திருப்தியும் நிச்சயம் கிடைக்காது. ஆக்ராவிற்கு போய் தாஜ்மஹாலை விறுவிறுவென சுற்றிப்பார்த்து, அதன் எதிரே நின்று போட்டோ எடுத்துக்கொள்வதால் மனம் சந்தோஷம் அடையாது.
அந்த இடத்தில் நீ ஷாஜகானாக அல்லது மும்தாஜாக மாற வேண்டும். இத்தனை பெரிய கல்லறை கட்டுவதற்கு எப்படி சிந்தனை ஏற்பட்டது, அந்த அளவுக்கு ஷாஜகான் மனதில் மும்தாஜ் எப்படி இடம் பிடித்தாள், எப்படியெல்லாம் கட்டியிருப்பார்கள், எந்த ஆண்டு கட்டப்பட்டது, எத்தனை பேர் கட்டினார்கள் என்றெல்லாம் தேடிப்படித்தும், கேட்டும் தெரிந்துகொள். அப்போதுதான் தாஜ்மஹாலின் ஆழமும் அர்த்தமும் உனக்குப் புரியவரும். கண்களை மூடிப்பார்த்தாலும் உன் மனதில் தாஜ்மஹால் சப்பணமிட்டு அமர்ந்துகொண்டு அளப்பரிய சந்தோஷம் கொடுக்கும். அந்த சந்தோஷம் உன் மனம் முழுவதும் நிரம்பிவழியும்போது… பரிபூரண ஓய்வு கிடைக்கும்.