ஞானகுரு :
ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், துணையாகவும் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே திருமணம் என்ற உறவு. அன்பு அதிகரிக்கும் நேரத்தில் வரமாக இருக்கும் திருமண உறவு, சுயநலம் அதிகரிக்கும்போது சாபமாகிறது. திருமணத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்காக குட்டிக் கதை.
ஆற்றைக் கடந்து பக்கத்து ஊருக்குப் போய் பொருட்கள் வாங்குவதற்கு சிலர் சென்றனர். அப்போது ஊருக்குப் பெரியவர் அங்கு வந்தார். அவர் கையில் சிலம்பக் கம்புகள் இருந்தன. இருவரிடமும் ஆளுக்கு ஒரு கம்பைக் கொடுத்தவர், ’இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச்சென்று, மாலையில் திரும்பியதும் என்னிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். ஊருக்குப் பெரிய மனிதர் என்பதால், அவர் பேச்சை தட்ட முடியாமல் அந்தக் கம்பை இருவருமே கொண்டுசென்றனர்.
அவரவர் வேலையை முடித்துக்கொண்டு மாலையில் திரும்பினார்கள். முதலில் வந்தவனிடம், ‘இந்தக் கம்பு பயணத்தின்போது உனக்கு பயனுள்ளதாக இருந்ததா?’ என்று கேட்டார். அவன், ‘இல்லைங்க… நீங்க சொன்னீங்களேன்னு இதை சும்மா தூக்கிட்டுப் போயிட்டு… தூக்கிட்டு வர்றேன்… ஒரு பிரயோஜனமும் இல்லை. கையில கம்பு வச்சிருந்ததால, நிறைய பொருட்கள் வாங்கிட்டு வர முடியலை’’ என்று வருத்தப்பட்டான்.
அப்போது வந்த அடுத்தவனிடமும் அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு அவன், ‘’நீங்க கம்பு கொடுத்தது ரொம்பவும் நல்லதாப் போச்சு ஆற்றைக் கடக்கும்போது எவ்வளவு ஆழம்னு சும்மா ஜாலியா பார்த்துக்கிட்டே போனேன். அதேபோல், வழக்கத்தைவிட கூடுதலா பொருட்கள் வாங்கி கம்போட இரண்டு பக்கமும் கட்டிக்கிட்டு ஈசியா தூக்கிட்டு வந்துட்டேன்’’ என்று சொன்னான்.
வாழ்க்கையில் எது கிடைத்தாலும், அதை வரமாகவும் சாபமாகவும் மாற்றிக்கொள்வது மனிதனின் கையில்தான் உள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.