ஞானகுரு ;
திருமணத்தைப் புனிதமாகக் கருதுபவர்கள் விவாகரத்தை அவமானமாகக் கருதுகிறார்கள். உண்மையில் புனிதம் என்பதும் இல்லை, அவமானம் என்பதும் இல்லை. விவாகரத்து செய்யாத தம்பதியர் அனைவரும் அன்புடன் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதில்லை. மூச்சுத் திணறினாலும் வெளியேற வழி தெரியாமலே பலரும் வாழ்க்கை நடத்துகிறார்கள்.
இணைந்து வாழ்வது இருவருக்கும் இடையூறு என்று உணர்பவர்கள், பேசி முடிவெடுத்துப் பிரிவது புத்திசாலித்தனம். இலக்கு தோல்வி அடையப் போவது தெரிந்தும் தொடர்ந்து பயணிப்பதில் அர்த்தமே இல்லை. உலகத்தை நேசிக்கத் தெரிந்தவர்களுக்கு அருகில் இருப்பவர்களை நேசிக்கத் தெரியாமல் போகலாம். அதீத அன்பும் சிலருக்கு மூச்சு முட்டலாம். எதுவாக இருந்தாலும் இருவரது தனிப்பட்ட விவகாரம்.
குழந்தை வளர்ப்பு மட்டுமே விவாகரத்தில் இருக்கும் மிகப்பெரும் இடையூறு. ஏனென்றால் குழந்தைக்கு ஆண், பெண் இருவரது நெருக்கமும் தேவைப்படுகிறது. அதற்காக கொடுமையைத் தாங்கிக்கொண்டு குடும்பம் என்ற அமைப்புக்குள் யாரும் இருக்கவேண்டிய அவசியமே இல்லை.
இன்னும் கொஞ்ச காலங்களில் திருமணம் என்ற உறவு வழக்கொழிந்து போய்விடும். பிடித்தவர்களுடன் சேர்ந்து நிற்பார்கள், பிடிக்காதவர்களை விலகிச் செல்வார்கள். பறவை போன்று மனிதர்களும் மாறிவிடுவார்கள். அதுவே இயற்கை வகுத்த வழி.