ஞானகுரு :
நம்பிக்கையே வாழ்வின் மிகச்சிறந்த அம்சம். தனக்கு எந்த ஆபத்தும் வராமல் அம்மா காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கை குழந்தைக்கு உண்டு. தன்னை ஒருபோதும் கைவிட மாட்டான் என்று காதலனை நம்புகிறாள் காதலி. தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் குடும்பத்தை நிறுவனம் அல்லது இன்சூரன்ஸ் காப்பாற்றும் என்று கணவன் நம்புகிறான். இப்படி ஒவ்வொரு நபரிடமும் ஏதேனும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கை உண்மையோ, பொய்யோ… ஆனால் வாழ்க்கைக்கு நிம்மதி கொடுக்கிறது, சந்தோஷம் தருகிறது. அதேபோன்று தெய்வம் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள். நல்லது. ஆனால், அந்த நம்பிக்கையை தெய்வம் காப்பாற்றுமா என்று யோசித்துப் பாருங்கள். சிங்கத்தின் சிலையால் உங்களை ஒருபோதும் கொல்ல முடியாது எனும்போது அந்த சிலையால் உங்களுக்குப் பலமும் கொடுக்க முடியாது. தெய்வம் மீது வைக்கும் நம்பிக்கையை உங்கள் மனதின் மீது வையுங்கள். உங்கள் மனதும் ஒரு தெய்வம், நீங்களும் ஒரு தெய்வம் என்பதை உணருங்கள். இதுவே, நல்லது தரும், நம்பிக்கை தரும், நிம்மதி தரும். உங்களைத் தவிர யாராலும் உங்களைக் காப்பாற்ற முடியாது என்ற உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள்.