ஞானகுரு :
முடிவு எடுத்துவிட்டு கேள்வி கேட்பது முட்டாள்தனம். உங்களைப் போன்று வேறு யாரும் முயற்சிக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பதில். பாம்பு கடித்து செத்தவர்களைவிட, பயத்தில் செத்தவர்கள்தான் அதிகம். அதுபோலத்தான் பிரசவ வலி பெண்களை பயமூட்டுகிறது. திடமான நம்பிக்கை, வலியைக் குறைக்கும் மூச்சுப் பயிற்சி, குழந்தை வெளிவருவதற்கான சரியான நிலை ஆகியவற்றுடன் ஆதரவாகப் பேசும் மருத்துவரும் இருந்துவிட்டால், கோழி முட்டையிடுவது போல் மிகச்சிறிய வேதனையுடன் குழந்தை பிரசவிக்க முடியும். ஆதி தாய்மார்கள் அப்படித்தான் இந்த உலகில் மனிதர்களை நிரப்பியிருக்கிறார்கள்.
இன்னொன்று தெரியுமா? இந்த உலகிலேயே மிகுந்த வலி என்றும் பிரசவ வலியை சொல்வது உண்டுதான். ஆனால், அந்த வலியை தாங்கும் சக்தி பெண்ணுக்கு மட்டுமே உண்டு. அந்த அனுபவத்தை நீ இழப்பதால் இழப்பு உனக்குத்தான்.
அதைவிடுங்கள், குழந்தை இந்த பூமியை தரிசிக்கும் நேரத்தைத்தான் நல்ல நேரம் என்று நினைக்கிறீர்களா? பெண்ணின் கருவணுக்குள் ஆண் அணு நுழைந்த நேரம், கருவுக்கு உயிர் வந்த நேரம் போன்றவற்றில் எது உண்மையான நல்ல நேரம்..? 24 மணி நேரமும் நல்ல நேரம் என்ற எண்ணத்துடன் மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். நல்லாம் நலமாகும்.