கேள்வி : நான் ஒன்று நினைக்க நடப்பது வேறு ஒன்றாக இருக்கிறது. இதை எப்படி சமாளிப்பது..?
- பி.விஜயா, சென்னை.
ஞானகுரு :
வெற்றியை விரும்பும் மனிதன் தோல்வியை விரும்புவதில்லை. செல்வத்தை விரும்புபவன் வறுமையை விரும்புவதில்லை. சுதந்திரத்தை விரும்புபவன் கட்டுப்பாடுகளை எதிர்க்கிறான். வெளிச்சத்தை விரும்புபவன் இருட்டைக் கண்டு அச்சப்படுகிறான். சுருக்கமாக இவ்வுலக வாழ்வில் இன்பத்தை மட்டுமே விரும்புகிறான், துன்பம் வரக்கூடாது என்று நினைக்கிறான். ஒரு நாணயத்தில் தலை, பூ இரண்டுமே இருக்கும். மெழுகுவத்தியில் வெளிச்சம் மட்டுமல்ல, அதன் நிழலும் இருக்கும். அதனால் முரண்பாட்டை விலக்கிவிட்டு இன்பத்துடன் மட்டும் வாழ்வது நடக்காத விஷயம். இரண்டையும் ஏற்கத் தெரிந்தவனே இன்பத்தை எளிதில் கண்டடைய முடியும்.
உண்மையில் மனிதனின் நண்பன் முரண்தான். உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் வலி உண்டாகும்போது வேதனையாக இருக்கும். ஆனால் அந்த முரண் உடலுக்கு நன்மை செய்வதாகவே இருக்கும். அதாவது அந்த குறிப்பிட்ட இடத்தில் ஏன் வலி உண்டாகிறது என்று ஆய்வு செய்யவேண்டிய அவசியம் உண்டாகும். அந்த குறிப்பிட்ட இடத்திலுள்ள உறுப்பின் பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டதும் அந்த வேதனை மறைந்துவிடும். வலியை அனுபவிப்பவனுக்குத்தான் ஆரோக்கியத்தின் ருசி தெரியும். தோல்வி அடைந்தவனுக்குத்தான் வெற்றியின் மகத்துவம் புரியும். நஷ்டம் அடைந்தவனுக்குத்தான் லாபத்தின் மகிமை தெரியும். அதனால் முரணுக்கு ஆசைப்படுங்கள்.