ஞானகுரு :
என்ன காரணத்துக்காக உயிர்கள் படைக்கப்பட்டன என்ற கேள்விக்கு அறிவியலிலும் ஆன்மிகத்திலும் சரியான விடை கிடையாது. ஆனால், மனிதர்கள் வாழத்தான் வேண்டும். மனிதர்கள் நிர்வாணமாக இந்த உலகிற்கு வருகிறார்கள், நிர்வாணமாகவே செல்வார்கள். பிறக்கும்போது தானே எந்த செயலும் செய்யமுடியாத அளவுக்கு பலவீனமாக இருக்கிறார்கள். முதுமையிலும் அதே நிலைக்குச் செல்கிறார்கள்.
பணம், பொருள், புகழ் எதுவும் இல்லாமல் பிறப்பது போன்று இந்த உலகில் சம்பாதித்த அத்தனையையும் விட்டுச் செல்கிறார்கள். அவ்வளவு தான் வாழ்க்கை. ஆனால், ஒருவருக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதில் இன்பமாக வாழ முடியும் என்பதே உண்மை. அப்படித் தான் அத்தனை உயிரினங்களும் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன.
தொட்டியில் இருப்பதற்காக எந்த மீனும் வருத்தமாக இருப்பதில்லை. கடலில் துள்ளுவது போலவே தொட்டியிலும் துள்ளுகின்றன. மனிதன் மட்டுமே தன்னிடம் எதுவுமே இல்லை, அக்கம்பக்கத்தில் நிறைய இருக்கிறது என்று பொறாமை, வெறுப்பு, ஆதங்கத்துடன் வாழ்கிறான்.
நூறு ரூபாய் சம்பாதிப்பவன் அதற்குள் வாழப் பழகினால் அவனைவிட எந்த கோடீஸ்வரனும் உயர்ந்தவர் இல்லை. என்ன இருக்கிறதோ, அவற்றில் மகிழ்ச்சியைக் கண்டுபிடியுங்கள். இந்த பூமியில் குறைந்த காலமே மனிதர்கள் வாழ்கிறார்கள். எனவே, கோபம், சண்டை, பிரிவு, வலி போன்றவைகளை எளிதாக எடுத்துக்கொள்ளப் பழகுங்கள். எல்லாவற்றையும் கொண்டாடும் மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்வதற்கே.