ஞானகுரு ;
நமது குழந்தைகளிடம் வெளிநாட்டு மோகம் எனும் புதிய நோய் வேகமாகப் பரவி வருகிறது என்று இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கவலை தெரிவித்திருக்கிறார். அதாவது, அவரது மகள் வெளிநாட்டில் வசிக்க விரும்புவதையொட்டி இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
உண்மையில் இது வரவேற்க வேண்டியதே தவிர, கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. இங்கு எது கிடைக்கவில்லையோ, அது வேறு ஒரு இடத்தில் கிடைக்கும் போது அதைத் தேடிச் செல்வதே சரியான செயல். அப்படி பிள்ளைகள் செல்லக்கூடாது என்றால், வெளிநாடு போன்று இந்தியாவை மாற்றும் முயற்சியைத் தான் ஜக்தீப் தன்கர் எடுக்க வேண்டும்.
வெளிநாட்டுக்கு ஏன் போகிறார்கள் என்று பார்த்தால் தரமான உயர் கல்வி, நியாயமான சம்பளம், சுகாதாரமான சுற்றுச்சூழல், தனிநபர் சுதந்திரம், பாதுகாப்பு, முன்னேறுவதற்கான வாய்ப்பு போன்றவையே காரணங்கள். இந்த காரணங்களைக் களைந்துவிடாமல் பிள்ளைகள் மீது குற்றம் சொல்வது தவறு. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று அன்றே தமிழர் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். ஆகவே, வெளிநாடோ, வெளி மாநிலமோ எங்கு வேண்டுமானாலும் சென்று பணி புரியுங்கள். அறிவையும், பொருளாதாரத்தையும் நன்கு வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே மகிழ்ச்சியும் மாற்றமும் தரும்.