ஞானகுரு :
இது வரை இந்து மதம் நிறைய மதங்களை விழுங்கி ஏப்பம் போட்டிருக்கிறது. மகாவீரர், புத்தரை எல்லாம் விஷ்ணுவின் அவதாரம் என்று ஒரு கதை கட்டினார்கள். புத்தர் கோயில் சிற்பங்களை எல்லாம் இந்து கடவுளாக மாற்றினார்கள். அப்போது எந்த ஆகமமும் குறுக்கே வரவில்லை. இப்போது சாய்பாபா சிலை வைப்பதில் ஆகமம் மீறிவிட்டதாக கதறுகிறார்கள்.
உண்மையில், எந்த ஒரு மனிதரும் கடவுளாக முடியாது. கடவுள் அவதாரமாக தன்னை சொல்லிக் கொள்பவர்களும் போலிகளே என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆகவே, சாய்பாபா ஒருபோதும் கடவுள் இல்லை.
சாய்பாபாவுக்கு தனியே கோயில் கட்டியிருந்தார்கள். அங்கே வரும் பக்தர்கள் எண்ணிக்கையைப் பார்த்து, பிரமித்து, அந்த கும்பலை தங்கள் கோயிலுக்குள் இழுத்து, சாய்பாபாவுக்கு இந்து கோயிலில் சமாதி கட்ட நினைத்தார்கள். ஆனால், வேறு மாதிரி நடக்கிறது. சிவன், பார்வதி, முருகன், பார்த்தசாரதியை விட சாய்பாபா சந்நிதிக்கு வியாழக்கிழமைகளில் கூட்டம் அதிகம் வருகிறது.
இதனால், இந்து கடவுள்களுக்கு மதிப்பும் மரியாதையும் குறைந்துவிடும் என்ற பயம் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளுக்கு வந்துவிட்டன. அதனாலே இப்போது துடிக்கிறார்கள்.
சாய்பாபா ஒரு முஸ்லீம் என்பதை நினைவூட்டுவதற்காக குரான் படிக்கப்படுகிறது என்று ஒரு சர்ச்சை கிளப்புகிறார்கள். மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடிப்பதற்காக மகாத்மா காந்தி டெல்லி வால்மீகி கோயிலில் குரான் ஓதுவதற்கு முயற்சி எடுத்தார். அதனாலே இந்து தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். சாய்பாபா, காந்தி ஆகியோர் மத நல்லிணக்கத்துக்கு ஆசைப்படலாம். ஆனால், இந்து அமைப்புகள் அப்படி விரும்ப மாடார்கள். அதனாலே ஆகமத்தைக் காட்டி சாய்பாபா சந்நிதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஒவ்வொரு சந்நிதிக்கு முன்பு உண்டியல் வைப்பதற்கும், ஸ்பெஷல் தரிசனக் கட்டணத்திற்கும் எந்த ஆகமமும் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.
இந்து கோயில்களில் பாலின ஆர்வம் தூண்டும் சிற்பங்களும், யானை, புலி, முதலை என்று விதவிதமான சிற்பம் வைப்பதற்கு இடம் கொடுக்கும் ஆகம விதிகள் சாய்பாபா சந்நிதிக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றால், இந்து மதம் பயப்படுகிறது என்று அர்த்தம். வருமானம் பறிபோகிறது என்ற அச்சம் வருகிறது. அதனாலே எதிர்க்கிறார்கள். அதுசரி, சாய்பாபாவுக்கு நிறைய சக்தி இருப்பதாக அவரது பக்தர்கள் நம்புகிறார்கள். அப்படி அவருக்கு சக்தி இருந்தால் இந்துக்களிடம் இருந்து அவரை காப்பாற்றிக் கொள்ளட்டும்.