ஞானகுரு :
வேட்டை நாய் போன்றவன் ஆண். தன் ஆசைக்காக காதல் வலை வீசி பெண்ணை பிடிக்கிறான். திருமணம் முடியும் வரையிலும் சொன்னதைக் கேட்கும் நாய்க்குட்டி போன்று தலையாட்டுகிறான். திருமணம் முடிந்ததும் பொய்மையில் இருந்து வெளியேறி, தன் உண்மையான முகத்தைக் காட்டுகிறான். அதனை தாங்கிக்கொள்ளும் பக்குவம் இன்றைய பெண்களிடம் இல்லை. அதேபோன்று திருமணத்திற்கு முன்பு பெண் அமைதியின் சொரூபமாகவும் அன்பின் இருப்பிடமாகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறாள். திருமணம் நடந்ததும் அவளும் இயல்பு வாழ்வுக்குத் திரும்பி தன் சுயநலத்தைக் காட்டுகிறாள். இது ஆணுக்கு அதிர்ச்சி தருகிறது.
இருவருக்கும் இப்போது பொருளாதார ரீதியில் எவரையும் சார்ந்திருக்கத் தேவை இல்லாத நிலை வந்துவிட்டது. எனவே, சுமை என்று தெரிந்தால் உடனே பந்தத்தை உதறி வெளியேறி விடுகிறார்கள். தன்னைவிட, தான் விரும்புபவர் நன்றாக இருக்கவேண்டும் என விரும்பும் காதலர்கள் தம்பதிகளாக மாறும்போது, அங்கு தோல்விக்கு இடமில்லை. அவர்களும் பிரிய நேரலாம். ஆனால், அது கவிதை நயமாக இருக்கும்.
