ஞானகுரு :
ஏதோ ஒரு நாட்டில் நடந்த விமான விபத்தில் 80 பேர் பலி என்ற செய்தியை, தேநீர் அருந்தியபடி எந்த சலனமும் இல்லாமல் உங்களால் படிக்க முடிகிறது. இது ஏன் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா..?
அந்த விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அதனால் அவர்களுடைய துயரமும் துன்பமும் உங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. முகம் தெரியாத மூன்றாம் மனிதர்கள் போன்று உங்கள் உறவு, சொந்தம் மற்றும் நண்பர்களைத் தள்ளி வைத்துப் பார்ப்பதே உண்மையான துறவு நிலை. இந்த நிலையை ஒவ்வொரு மனிதரும் அடைய முடியும்.
வாழ்க்கையில் துன்பம், இன்பம் என எதுவுமே நிஜம் இல்லை, நிலைத்திருக்கப் போவதும் இல்லை. இந்த உண்மை புரியாமல் தான் துன்பம் வந்ததும் மக்கள் அழுது புலம்புகிறார்கள். இந்த துன்பமும் கடந்துபோகும் என்ற உண்மை புரியாமல் அழுது புலம்பும் மனிதர்களைப் பார்த்துத்தான் சிரிக்கச் சொல்கிறார் திருவள்ளுவர். சிரித்துப் பழகுங்கள். வாழ்க்கை கைக்குள் வந்துவிடும்.