ஞானகுரு :
முதல்வர் பதவியில் இருந்த ஜெயலலிதா பெங்களூரு நீதிமன்றம் சென்றபோது, அவர்பின்னே ஏராளமான கார்கள் அணிவகுத்துச் சென்றன. வழியெங்கும் தோரணங்களும் அலங்கார வளைவுகளும் வரவேற்பு கொடுத்தன. ரோட்டின் இருபுறமும் ஆதரவாளர்கள் நின்று வாழ்த்து கோஷம் போட்டார்கள். எத்தனை பெரிய தலைவி என்ற எண்ணத்தை கர்நாடக நீதிபதிகளுக்கும் மக்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காகவே இத்தனை செயல்களும் நடந்தேறின. ஆனால், நீதிமன்றத்தில் அவர் செய்த குற்றங்களே பேசின. ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த கணமே அவரது முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. அங்கு நின்ற நூற்றுக்கணக்கான கார்களில் எந்த ஒன்றும் அவரை சிறைக்கு அழைத்துச்செல்வதற்குப் பயன்படவில்லை. தன்னை ஒரு மாபெரும் தலைவியாகவும், தன்னைவிட பெரியவர் யாருமில்லை என்று நினைத்த ஜெயலலிதாவுக்கே இதுதான் கதி. யாரும் பெரியவரும் இல்லை, சிறியவரும் இல்லை என்பதுதான் வாழ்க்கை சொல்லித்தரும் பாடம்.
தன்னை பெரியவராக ஒருவர் நினைக்கும் நேரத்திலேயே மற்றவர்களிடம் இருந்து விலகி தனித் தீவாகி விடுகிறார். சாதாரணமாக மற்றவர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி கூட அவர்களுக்கு ஸ்பெஷலாகக் கிடைத்தாலே இனிக்கும். வாழும் காலத்தில் தன்னைப் பற்றி எத்தனை உயர்வாகவும் ஒருவர் நினைத்துக்கொள்ளலாம். முதுமையிலும், மரணத்தருவாயிலும் உண்மை புரிந்துவிடும்.