ஞானகுரு :
உலகத்திலேயே கொடுமையான வலி என்றால், அது பிரசவ வலி மட்டும் தான். சுயநினைவுடன் இருக்கும் மனிதனின் கையை முறிப்பதற்கு சமமான வேதனையை பிரசவத்தின்போது பெண் அனுபவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அத்தனை கொடுமையான வேதனை என்பதால்தான் பிரசவ நேரத்தில் ஒவ்வொரு பெண்ணும் அலறுகிறாள், கத்துகிறாள், கூப்பாடு போடுகிறாள். ஆனால் அந்த வேதனையை ஆனந்தமாக ஏற்றுக்கொள்கிறாள்.
குழந்தை பெற்றுக்கொண்டதும் அதுவரை அனுபவித்த அத்தனை வேதனைகளையும் மறந்துவிடுகிறாள். மீண்டும் அப்படியொரு வேதனையை தாங்கிக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளவும் தயாராகிறாள். பிரசவம் மட்டுமின்றி, குழந்தை வயிற்றில் இருக்கும் ஒன்பது மாதங்களும் வேதனை தரும் சுமையுடனே வாழ்கிறாள். குழந்தையை சுகமான சுமையாக நினைப்பதால், வலியை விரும்பி ஏற்றுக்கொள்கிறாள் பெண். அப்படித்தான் நோயின் வலியையும் ஏற்றுக்கொள்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அடுத்த தீர்மானம் மிகவும் முக்கியமானது. ஆம், இந்த வலி, வேதனை எல்லாமே விரைவில் தீர்ந்துவிடும். இத்தனை கொடுமையான வலி தொடர்ந்து இருக்காது என்று நம்பவேண்டும். அதனால் துன்பத்தை உண்டாக்கும் வலியை ஏற்றுக்கொண்டு அனுபவிக்க வேண்டும். எப்படி கர்ப்பிணி வலியை தாங்கிக்கொண்டு குழந்தை பெறுகிறாளோ, அப்படியே நாளைய ஆரோக்கியத்துக்காக இன்றைய வலியை தாங்கிக்கொள்ளுங்கள்.
நோயின் வேதனையும் வலியும் நீடிக்கும் பட்சத்தில், அந்த கொடுமையும் பழகிப் போய்விடும். குணமடைந்தால் நல்லது. செத்துப்போனால் அதைவிட நல்லது.