ஞானகுரு ;
இந்த உலகில் நூற்றுக்கு 80 சதவீத காதல், திருமணம் என்ற உறவுக்கு வருவதே இல்லை. அற்பமான காரணங்களுக்காக எல்லாம் காதலர்கள் பிரிந்துவிடுகிறார்கள். அதையும் மீறி குடும்பத்தை எதிர்த்து சண்டை போட்டு திருமணம் முடிக்கும் காதலர்கள் எல்லோரும் அதன் பிறகு மகிழ்ச்சியாக வாழ்வது இல்லை. தவறான நபரை காதல் செய்துவிட்டதாக சண்டை போடுகிறார்கள். அதனால் காதலித்துத் திருமணம் முடிப்பவர்கள் பிரிவதும் அதிகரித்தே வருகிறது.
இதற்கு காரணம் என்ன தெரியுமா..?
திருமணத்துக்குப் பிறகு அவர்கள் கணவன், மனைவி என்ற புதிய பந்தத்துடன் வாழ வேண்டியிருக்கிறது. அதேநேரம், திருமணத்திற்கு முன்பு இருந்தது போன்ற காதலர்கள் மனப்பான்மையைத் தொடர நினைக்கிறார்கள். அதனாலே திருமணம் தோல்வி அடைகிறது.
ஏனென்றால் காதலர்களுக்கு எந்த பொறுப்பும் கிடையாது. இஷ்டத்துக்கு வீணாக ஊர் சுற்றுவார்கள், இஷ்டத்துக்கு செலவு செய்வார்கள். யாருக்கும் பதில் சொல்ல மாட்டார்கள்.
ஆனால், கணவன், மனைவி என்று மாறியதும் குடும்பம் என்ற சுமையை தோளில் சுமக்க வேண்டும். பணம் சம்பாதிப்பது, சேமிப்பது, வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, குழந்தை வளர்ப்பது, பதவி உயர்வுக்குப் போராடுவது போன்ற காரணங்களுக்காக நிறைய நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். பெரியவர்களுக்குக் கட்டுப்பட வேண்டியிருக்கும். இதனாலே கருத்துவேறுபாடு வருகிறது.
காதலிக்கும் நேரத்தில் அன்பு செலுத்தியது போன்று இப்போது கவனம் செலுத்துவதில்லை, கண்டுகொள்வதில்லை, ஏமாந்துவிட்டேன் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இரண்டு பக்கமும் இந்த ஏமாற்றம் அதிகரிக்கும் போது காதல் தோற்றுப் போகிறது. திருமணம் உடைந்துபோகிறது.
விட்டுக் கொடுப்பதும், குறைகளோடு ஏற்றுக் கொள்வதுமே உண்மையான காதல் என்பதைப் புரிந்துகொண்டு காதலிப்பவர்கள் மட்டுமே திருமணத்துக்குப் பிறகும் மகிழ்ச்சியோடு வாழ முடியும். ஆதலால் காதலைப் புரிந்துகொண்டு காதல் செய்யுங்கள், திருமணம் செய்யுங்கள், மகிழ்ச்சியோடு வாருங்கள்.