அன்புக்கு வழிகாட்டி
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்லப்படும் திருமணங்கள் இப்போது நீதிமன்றத்தில் பிரிக்கப்படுகிறது. பெற்றோர் பார்த்துவைத்த திருமணம் மட்டுமின்றி, காதல் திருமணங்களும் உடைந்துதான் போகின்றன. எந்த ஒரு நபரும் விவாகரத்து பெற வேண்டும் என்ற எண்ணத்தில் திருமண பந்தத்தில் நுழைவதில்லை என்றாலும், சேர்ந்து வாழ்வதைவிட பிரிந்து வாழ்வதே நல்லது என்ற முடிவுக்கு இப்போது விரைந்து வந்துவிடுகிறார்கள். இந்த உறவு விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும், பொறுமையும் இளைய சமுதாயத்திடம் குறைந்துகொண்டே வருவதுதான், இந்த விவாகரத்துகள் அதிகரிக்கக் காரணமாகிறது.
உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் வித்தியாசமான குணநலன்கள், பண்புகள் பெற்றவர்கள். நம்மை போலவே அவரும் இருக்க வேண்டும் என்று எண்ணுவது தவறு. அதற்கு வாய்ப்பே இல்லை என்ற உண்மையை அறிந்துகொள்ள வேண்டும்.
முன்பு பெண்கள் பெரும்பாலும் பொருளாதாரத்திற்கு கணவனை நம்பியே இருந்தனர். எனவே, சுதந்திரம், ஆசை, கனவுகள் பறிக்கப்பட்டபோதும், அதனை எதிர்த்து நிற்க முடியாமல் அடிமையாக இருந்தனர். ஆனால், இப்போது பெண்களும் பொருளாதார சுதந்திரம் அடைந்துவிட்டாள். எனவே, முன்பு போன்று பெண்ணை நடத்தமுடியாது என்பதை ஆண்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
அதேநேரம், ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் இயற்கை படைத்திருக்கிறது. ஆண்கள் செவ்வாய், பெண்கள் வெள்ளி எனும் அளவுக்கு இரண்டு பேருக்கும் எக்கச்சக்க கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், இருவரும் சேர்ந்துவாழ்வதுதான் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும் முரண்
டி.வி. ரிமோட் தரவில்லை, பிரியாணி சமைக்கவில்லை, எப்போதும் செல்போன் நோண்டிக்கொண்டே இருக்கிறார் என்றெல்லாம் காரணம் காட்டி விவாகரத்துகள் நடக்கின்றன. ஆகவே, இப்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்துக்கு முன்னரே சில உறுதிப்பாடுகள் தேவைப்படுகிறது. அதாவது, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு தயாரான மனப்பான்மை ஏற்படும்போது மட்டுமே, திருமணத்துக்கு சம்மதிக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில், அவர்கள் லட்சிய தம்பதியராக நீண்ட காலம் சேர்ந்து வாழ்வதற்கான சில வழிகாட்டுதல்கள் இங்கே.
- உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும், அழகைப் பேணுவதிலும் இருவரும் என்றென்றும் அக்கறை செலுத்துங்கள். திருமணம் ஆகிவிட்டதே என்ற அலட்சியத்தினால் பெண் குண்டாவதும், ஆண் தொப்பை போடுவதும் திருமண பந்தத்திற்கு பங்கம் விளைவிப்பவை.
- இன்று புதிதாகப் பிறந்ததாக எண்ணிக்கொள்ளுங்கள். பழைய வாழ்க்கையை, பழைய உறவுகளை, பழைய நட்புகளை குறைத்துக்கொண்டு, புதிய பந்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடும்க்கள். கடந்தகாலத் தவறுகளை மறந்துவிட்டு, புதிய வாழ்க்கைக்கு உண்மையாக இருங்கள்.
- இரண்டு பக்க உறவுகளையும், நண்பர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் அணுகுங்கள். யாரையும் உயர்த்திப் பிடிக்கவும் வேண்டாம், யாரையும் மட்டம் தட்டுவதும் வேண்டாம்,
- கணவன், மனைவிக்கும் சின்னச்சின்ன ஊடல்கள் நிகழ்வது சகஜம்தான். சந்தேகம் என்பதை நுழையவிடாதீர்கள். கருத்துவேறுபாடு வரும்போது தம்பதியர் இருவரும் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். எந்த காரணம் கொண்டும் யாருடைய உறவையும், நட்பையும் சமரசம் பேசுவதற்கு அழைக்காதீர்கள்.
- ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுங்கள். வேலைகளை பங்கு போட்டு செய்யுங்கள். யாரும், யாருக்கும் அடிமையாக இல்லாமல், நட்புடன் பழகுங்கள். வெளியே எங்கு போவதாக இருந்தாலும் தம்பதி சமேதராகச் செல்லுங்கள். பொது இடங்களில் உங்கள் துணையைப் பற்றி குற்றம், குறையைக் கூறாதீர்கள்.
- இருவரும் வேலைக்குச் செல்பவராக இருந்தாலும் சரி, ஒருவர் வேலைக்குச் செல்பவராக இருந்தாலும் சரி, அன்றன்று அலுவலகத்தில் அல்லது வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து, குறைந்தது அரை மணி நேரம் பேசுங்கள்.
- பணத்தை இருவரும் சேர்ந்தே கையாளுங்கள். பிறருக்கு பண உதவி செய்வது, கடன் கொடுப்பது அல்லது கடன் வாங்குவது போன்ற எல்லாமே இருவருக்கும் தெரிந்தே நடக்க வேண்டும். ஒருவருக்குப் பிடிக்காத விஷயங்களை அடுத்தவர் நிச்சயம் செய்ய வேண்டாம்.
- இருவரும் அவரவர் விருப்பங்களுடன் வாழுங்கள். யாருக்காகவும் யாரும் மாறவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டாம். திருமணத்திற்கு முன்பு சில தீய பழக்கங்களில் விழுந்திருந்தால், அதிலிருந்து மீண்டு வருவதற்கு அவகாசம் கொடுத்து காத்திருங்கள். ஒரே நாளில் எந்த மாற்றமும் நிகழாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
- தினமும் ஒரு முறையாவது ஒருவரையொருவர் பாராட்டுங்கள். இன்று இட்லிக்கு வைத்த சட்னியின் சுவை அபாரம் என்றோ, ஊதா கலர் சட்டையில் பிரமாதமாக இருக்கிறீர்கள் என்றோ சின்னச்சின்ன விஷயங்களுக்கும் பாராட்டுங்கள்.
- வேலை, பதவி உயர்வு, வீடு, கார் போன்ற எந்த ஒரு எதிர்காலத் திட்டத்துக்காகவும் தாம்பத்திய உறவை தள்ளிப்போடாதீர்கள். 30 வயதுக்கு மேல் குழந்தை பிறப்பு பல்வேறு சங்கடங்களைத் தரக்கூடும் என்பதால், விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள். அதுதான், அடுத்த தலைமுறைக்கு நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான முதல் கடமை.