என்ன செய்தார் சைதை துரைசாமி – 349
சிங்கப்பூரில் நடைபெற்ற மேயர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட மேயர் சைதை துரைசாமி, அங்கிருந்த ஒவ்வொரு மணி நேரத்திலும் சென்னையின் நன்மைக்குத் தேவையான பல்வேறு தகவல்களை சேகரித்துக்கொண்டார். சிங்கப்பூரில் நீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவுநீர் சுரங்க வழியைப் பார்வையிட்டதும் மேயர் சைதை துரைசாமிக்கு மிகுந்த நம்பிக்கை பிறந்தது.
மூன்றாவது நாள் அதாவது 2012, ஜூலை 3 அன்று அடுத்த 20 ஆண்டுகளில் பெருநகரங்கள் சந்திக்க இருக்கும் பிரச்னைகள் அதற்கான தீர்வுகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. பெருநகரத்துக்கு வந்து குவியும் மக்கள் தொகைப் பெருக்கம், தண்ணீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல், மருத்துவ வசதிகள் பல்வேறு தகவல்கள் அலசி ஆராயப்பட்டன.
இந்த நேரத்தில் சென்னையிலுள்ள கூவம், அடையாறு போன்ற நீர்வள ஆதாரங்களை சுத்தப்படுத்தவும், செம்மைப்படுத்தவும் பெறுவதற்கான நிதி ஆதாரங்களை, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் (ஜெ.என்.என்.யு.ஆர். எம்.) மூலம் பெறுவதற்கான வழிகள் குறித்து, இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரிடம் மேயர் சைதை துரைசாமி கேட்டார்.
மேயர் சைதை துரைசாமியின் உண்மையான ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அமைச்சர், ‘’தமிழக அரசு மூலம், நீர்நிலைகளை சுத்தப்படுத்துவதற்கு விரிவான திட்ட விபர அறிக்கையை மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பினால் நிதி ஆதாரம் பெறுவதற்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு’’ என்று மத்திய அமைச்சர் உறுதியளித்தார். அதோடு, நகர்ப்புற வளர்ச்சிக்கு புதிய திட்டம் ஒன்று இறுதி வடிவமைப்பில் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு மேயர் சைதை துரைசாமிக்கு மிகுந்த நம்பிக்கை கொடுத்தது. ஏதேனும் ஒரு வழியில் நிதி ஆதாரம் பெற்றுவிட முடியும், சென்னையை முழுமையாக மாற்றிவிட முடியும் என்று நம்பினார்.
- நாளை பார்க்கலாம்.