நாடு முழுவதும் பெருகும் ஆதரவு
இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திரமோடி இருக்கும் நிலையில், முதன்முறையாக பிரியங்கா காந்தி வெளிப்படையாக இஸ்ரேலுக்கு எதிராகக் குரல் எழுப்பியிருக்கிறார். இந்த ஆதரவுக் குரலுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகிவருகிறது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ’’அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும். இது காட்டுமிராண்டித்தனத்துக்கும் நாகரிகத்துக்கும் இடையிலான மோதல்’’ என்று தங்கள் போராட்டம் குறித்துத் தெரிவித்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து பிரியங்கா காந்தி, “காஸாவில் நடைபெறும் இனப்படுகொலையில், நாளுக்கு நாள் அழிக்கப்படும் பொதுமக்கள், தாய், தந்தை, மருத்துவர்கள், செவிலியர்கள், உதவிப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகளுக்காக இனி குரல்கொடுத்தால் மட்டும் போதாது.
வெறுப்பு மற்றும் வன்முறையில் நம்பிக்கையில்லாத இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் உலகில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் இஸ்ரேல் அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளைக் கண்டித்து தடுத்து நிறுத்துவதற்கு வலியுறுத்துவது, சரியான சிந்தனையுள்ள ஒவ்வொரு தனிநபரின் தார்மீகப் பொறுப்பு. நாகரிகம் மற்றும் ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் உலகில் அவர்களின் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
ஆனால் அதற்கு மாறாக, அமெரிக்க காங்கிரஸில் இஸ்ரேல் பிரதமருக்குக் கைதட்டல் கொடுக்கப்பட்ட பிம்பத்துக்கு நாம் உட்படுத்தப்படுகிறோம். அவர், காட்டுமிராண்டித்தனத்துக்கும் நாகரிகத்துக்கும் இடையிலான மோதல் என்று கூறுகிறார். காட்டுமிராண்டியான அவருக்கும், அவரின் காட்டுமிராண்டித்தன அரசுக்கும் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் அளித்த அசத்திய ஆதரவளித்த தவிர அவர் கூறிய அனைத்தும் சரியே. உண்மையில் இது மிகவும் அவமானகரமானது” என்று கூறியிருக்கிறார்.
முதன்முறையாக வெளிநாட்டுப் பிரச்னையில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராகக் கருத்து சொல்லியிருக்கும் பிரியங்காவின் பேச்சு இந்தியா முழுக்க பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. உலக அரங்கிலும் ஆர்வமாகப் பார்க்கப்படுகிறது.