பள்ளி சீரமைப்பு மாநாட்டில் பிரதமர் நேரு

காமராஜர் நினைவலைகள் – 22

பள்ளிக்கூடம் திறந்தால் போதாது, பள்ளிக்கூடத்திற்க்கு நிலையான சொத்துக்கள் ஏற்படுத்தபட வேண்டும், அதுதான் பள்ளிக்கூடம் தொடர்ந்து எவ்வித சிக்கலும் இல்லாமல் செயல்பட வழிவகுக்கும் என்பதை காமராஜ் உணர்ந்தார். சமுதாய பங்கேற்ப்பை ஊக்குவிக்கும் மாநாடுகளை தமிழ் நாடெங்கும் நடத்துவதற்கு ஆணையிட்டார்.

பள்ளிக்கூடங்களின் அடிப்படைத் தேவைகள் எவையென்று பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன. தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு பட்டியல், உயர் தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு பட்டியல், உயர் நிலைப் பள்ளிகளுக்கு ஒரு பட்டியல் என்று மூன்று பட்டியல்கள் உருவாயின. தொடக்கப் பள்ளிக்கூடங்களுக்கு, என்னென்ன வசதிகள் இல்லை என்பது கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, உதவுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டனர்.

கிராம மக்கள் உற்சாகத்துடன் உதவினர். இந்த அனுபவத்தின் அடிப்படையில் பள்ளிக்கூடங்களின் மேம்பாட்டிற்காக விரிவான மக்கள் இயக்கமாக ஆக்குவது என முடிவு செய்யப்பட்டது. ‘பள்ளி வளர்ச்சித் திட்ட மக்கள் இயக்கம்’ என்பதை உருவாக்கி, மக்ககளை கல்வி வளர்ச்சிக்கு உதவ முன் வரச் செய்தார்.

இத்திட்டம் 1958-ல் செங்கற்பட்டு மாவட்டம் கடம்பத்தூரில் துவங்கியது. இம்முதல் முயற்சி வெற்றிகரமாக செயல்பட்டதால், தமிழ் நாட்டில் மேலும் 159 பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டது. இந்த இயக்கத்தை தொடங்கிய 25 மாதங்களில், தமிழகமெங்கும் 133 மாநாடுகளை நடத்தி 4 கோடி ரூபாய் பணத்தையும், 2.47 கோடி பெறுமானமுள்ள பொருள்கள் நன்கொடையாகப் பெற்றார்.

1958-ல் திசையன்விளை மாநாட்டில் முதல் அமைச்சர் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் 102 பள்ளிகள் பங்கேற்றன. மாநாட்டில் முன் வைக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு ரூபாய் 1,38,000 ஆகும். மாநாட்டின் மூலம் பெறப்பட்ட நிதிகளின் மொத்த மதிப்பு 1,36,000 ரூபாய். முதல் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்ட இத்தகைய ஒரு மாநாடு செங்கற்பட்டு நகரத்திலும் நடைபெற்றது. இதில் இந்திய கல்வி அமைச்சர் சி.கே.பந்த் கலந்து கொண்டர். 826 பள்ளிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ரூபாய் 23 லட்சத்திற்கு திட்டம் வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.

அம்மாநாட்டில் சி.கே.பந்த் உரையாற்றும் போது, “பிற மாநிலங்களில் முளைக்காத, நல்ல மேம்பாட்டு திட்டங்கள், சென்னை மாகாணத்தில் மட்டும் பயிராவது வியப்பானது.” என்று கூறினார். கூறியது மட்டுமின்றி, டெல்லி சென்றவுடன், பிரதமர் நேருவிடம் இம்மாநாடுகளை பற்றி வியந்து கூறியுள்ளார்.

அதன் பின்பு காரைக்குடியில் உள்ள ஆ.தெக்கூரில் நடந்த பள்ளி சீரமைப்பு மாநாட்டில் பிரதமர் நேரு கலந்து கொண்டார். அடுத்த நாள் திருநெல்வேலில் உள்ள அடைக்கலப்புர மாநாட்டிலும் நேரு கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து, கல்வி மேம்பாட்டு திட்டங்களில் தமிழகத்தின் வழியில் செயல்படுமாறு அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் நேரு கடிதம் எழுதினார்.

படிக்காத மேதை காமராஜர்தான் எத்தனையோ படித்த மேதைகளை உருவாக்கினார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment