பிறந்த குழந்தைக்கு மாதவிலக்கு, மார்பு வீக்கம்

Image
  • டாக்டர் பிரசிதா, கர்ப்பரட்சாம்பிகை ஃபெர்டிலிட்டி சென்டர், சென்னை

கர்ப்பம் அடைந்த பெண் பிரசவம் முடிந்ததும் அக்கடா என்று அமைதியாக இருக்க முடியாது. அந்தக் குழந்தை வாயைத் திறந்து பேசும் வரையிலும் ஏகப்பட்ட மருத்துவப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவற்றில் ஒரு சில வித்தியாசமான பிரச்னைகளைச் சொல்கிறார் டாக்டர் பிரசிதா

குழந்தைகு மார்பு வீக்கம்

குழந்தை பிறந்ததை ஆனந்தமாக கொண்டாடும் பெற்றோர், சில நேரங்களில் குழந்தையின் மார்பு பகுதி கொஞ்சம் வீங்கியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைவதுண்டு. இது சாதாரண ஹார்மோன் பிரச்னை என்பதால் அதிர்ச்சி அடைவதற்கு அவசியம் இல்லை.

ஆண், பெண் இரண்டு குழந்தைக்கும் மார்பு வீக்கம் காணப்படுவதற்க்கு வாய்ப்பு உண்டு. குழந்தைக்கு பால் தரவேண்டும் என்பதற்காக கர்ப்பம் அடையும் பெண்ணுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரக்கிறது. அதனாலே தாயின் மார்பு பெரிதாகிறது. தாயிடம் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் குழந்தைக்கும் தொப்புள் கொடி மூலம் பரவும் காரணத்தாலே குழந்தைகளும் மார்பு வீக்கத்துடன் பிறக்கிறார்கள்.

இந்த வீக்கம் இரண்டு வாரங்களுக்குள் நிச்சயமாக வற்றிவிடும் என்பதால் பெற்றோர் கவலைப்படுவதற்கு அவசியம் இல்லை. குழந்தையின் மார்பை சிறிதாக்குவதற்காக நசுக்குவது அல்லது பாலை பீய்ச்சி எடுப்பது போன்ற எந்த காரியங்களையும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. தாயிடம் இருந்து ஈஸ்ட்ரோஜன் தொடர்ந்து குழந்தைக்கு கிடைக்காது என்பதால் தானாகவே இந்த குறை சரியாகிவிடும்.

குழந்தைக்கு மாதவிலக்கு

அதேபோன்று பிறந்த சில தினங்களில், பெண் குழந்தைகளின் பிறப்புறுப்பில் ரத்தக்கசிவு தென்படுவதற்கு வாய்ப்பு உண்டு. பெண் குழந்தைக்கு ஏதோ ஆபத்து என்று அச்சப்படுவதற்கு அவசியம் இல்லை. குழந்தைகளின் மார்பு வீக்கமாக இருப்பதுபோல், இதுவும் ஹார்மோன் விளையாட்டுதான்.

பெண் குழந்தைகளின் பிறப்புறுப்பை சுற்றியுள்ள பகுதிகள் வீக்கமடைந்து காணப்படலாம். பெண் குழந்தையின் பிறப்புறுப்பில் வெள்ளைப்படுதல் இருக்கவும் வாய்ப்பு உண்டு. மிகவும் குறைவான அளவில் பிறப்புறுப்பில் ரத்தம் தென்படவும் வாய்ப்பு உண்டு. குழந்தையின் மார்பில் இருந்து பால் கசிவதற்கும் வாய்ப்பு உண்டு.

தாய்க்கு அதிகப்படியாக சுரக்கும் ஹார்மோன் காரணமாக, இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படுவது சகஜமே. இரண்டு மாதங்களுக்குள் இந்த மாற்றங்கள் எல்லாமே படிப்படியாக குறைந்துவிடும். அதற்கு மேல் நீடிக்கும்போதும், அதிகப்படியாக ரத்தக்கசிவு இருந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைக்கு மஞ்சள் காமாலை

பிறந்த குழந்தைகளுக்கு சில நாட்கள் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது சகஜமான ஒன்று. அதிக சிவப்பணுக்களுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு தென்படுகிறது. சிவப்பணுக்கள் சிதைவடையும்போது பிலிரூபினை விடுவிப்பதால் மஞ்சள் காமாலை அறிகுறி தென்படுகிறது.

பாதிக்கப்பட்ட குழந்தையின் கண்கள், தோல், சிறுநீர் போன்றவை மஞ்சள் நிறமாக தென்படும். எப்போதும் தூக்கக்கலக்கத்தில் குழந்தை இருக்கும். பால் குடிப்பதற்கான ஆர்வமும் ஆசையும் குழந்தைக்கு குறைவாக இருக்கும். குழந்தையின் மலம் கருப்பு நிறத்தில் இருக்கும். குழந்தையின் ரத்தத்தில் பிலிரூபின் அளவை கணக்கெடுத்து மேற்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

குழந்தையின் மேனியின் மீது ஒளியை பாய்ச்சும் ஃபோட்டோதெரபியின் மூலம் மஞ்சள் காமாலையை கட்டுப்படுத்தலாம். பிறந்த குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுதல், நன்றாக மலம் கழிக்கச் செய்தல் போன்ற செய்கை மூலம் ஆரம்ப நிலையிலான மஞ்சள் காமாலையை சிகிச்சையின்றி குணப்படுத்த முடியும்.