மாநகராட்சிப் பள்ளிகளில் பாலர் சபை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 146

ஆரம்பப்பள்ளியில் சைதை துரைசாமி படித்த 1960 காலகட்டங்களில் பள்ளிகளில், மாணவர்களின் தனித்தன்மையை மேம்படுத்துவதற்காக பாலர் சபை என்ற அமைப்பு இருந்தது. பாலர் சபை மூலம் ஜனநாயகம், விவசாயம், தொழில் போன்றவைகளை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இருந்தது. குறிப்பாக வகுப்பறையில் மாதிரி அமைச்சரவை அமைத்து கல்வி மந்திரி, விவசாய மந்திரி, நிதி மந்திரி என்றெல்லாம் உருவாக்கி அரசியல் அமைப்பை அறிமுகப்படுத்தி இருந்தார்கள்.

அதோடு பள்ளி வளாகத்தில் காய்கறிச் செடி வளர்ப்பது, பத்திரிகை செய்திகளைப் படித்துச் சொல்வது, தனித்திறன் காட்டுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவது போன்ற வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதனால் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கியிருக்கிறார். இதுவே, அவரது அரசியல் ஆர்வத்துக்கு ஒரு காரணமாக அமைந்தது. தனக்குக் கிடைத்த வாய்ப்பு போன்று மாநகராட்சிப் பள்ளி மாணவர்களும் தனித்திறன் பெற வேண்டும் என்று விரும்பினார்.

அதன்படி வாரம்தோறும் வெள்ளிக் கிழமைகளில் ஒரு மணி நேரம், பாலர் சபை எனும் திறன் அறியும் வகுப்பு நடத்துவதற்கு மேயர் சைதை துரைசாமி பிரத்யேக ஆலோசனை வழங்கினார். அதன்படி மாணவர்களிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் பாலர் சபை வகுப்பு தொடங்கப்பட்டது. பாட்டு பாடுதல், நடனம் ஆடுதல், இசைத்தல், பாரதியார் பாடல், திருக்குறள் ஒப்பித்தல், கட்டுரை எழுதுதல், கவிதை படித்தல், தனித்திறன் காட்டுதல் என ஏதேனும் ஒரு வகையில், ஒவ்வொரு மாணவரும் தம் திறமையைக் காட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டது.

பாலர் சபை வகுப்புகளில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, நடனப்போட்டி, இசைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும் மேயர் சைதை துரைசாமி ஏற்பாடுகள் செய்தார்.  குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற தினங்களில் மாணவர்களின் திறனை அனைவரும் அறியும் வகையில் கலைநிகழ்ச்சி நடத்துவதற்கும் அறிவுறுத்தப்பட்டது. மாநகராட்சிப் பள்ளியில் படிப்பதற்கு மாணவர்களும் பெற்றோர்களும் பெருமைப்படும் அளவுக்கு மதிப்பு உயர்ந்தது என்றால் இதற்கு முழு காரணமும் சைதை துரைசாமி மட்டும் தான்.

  • நாளை பார்க்கலாம்

Leave a Comment