எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வாரா..?
இறந்த தலைவர்களின் நினைவு நாள் என்றாலே அமைதிப் பேரணி நடத்துவது அனைத்துக் கட்சிகளும் வழக்கம். பொதுவாக இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியினர் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள். ஆனால், விஜயகாந்த் நினைவு நாள் பேரணியை மாபெரும் அரசியல் மாநாடு போன்று நடத்துவதற்கு பிரேமலதா திட்டமிடுவது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து பேசிய பிரேமலதா விஜய்காந்த், ‘’கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் பேரணியில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க விரும்புகிறோம். இதற்காக திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நேரில் அழைப்பு வழங்க உள்ளோம்” என்று தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் கட்சியினருக்கு அதிருப்தி ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்துப் பேசும் கேப்டன் அபிமானிகள், ‘’கேப்டன் மரணத்தின் போதும் அதனை பிரேமலதா அரசியலாக்கி ஆதாயம் அடையவே விரும்பினார். விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருப்பதால் இப்படி அழைப்பு விடுத்து அனைத்துக் கட்சிகளிடமும் தன்னுடைய செல்வாக்கைக் காட்ட நினைக்கிறார். தி.மு.க.வினர் யாரேனும் இந்த பேரணியில் பங்கெடுத்துக்கொண்டால், இதை வைத்து அ.தி.மு.க. கூட்டணியில் தன்னுடைய பேரத்தை அதிகரிக்கவே திட்டம் போடுகிறார்.
பிரேமலதா அழைப்பு விடுத்தாலும் எந்தக் கட்சியிலும் பெரிய தலைவர்கள் வரப்போவதில்லை. எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டால் மட்டுமே இவரது அழைப்புக்கு மரியாதையாக இருக்கும். ஆனால், அ.தி.மு.க.வில் ஜெயக்குமார் பா.ஜ.க.வில் தமிழிசை போன்றவர்கள் மட்டுமே பங்கு பெறுவார்கள். இப்போது இருக்கும் கூட்டணியைக் காப்பாற்றிக் கொண்டாலே போதும். தி.மு.க.வினரும் கலந்துகொண்டால் கூட்டணிக் குழப்பம் ஏற்பட்டு கடந்த சட்டமன்றத் தேர்தல் போன்று அவமானப்பட நேரிடும்’’ என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.