உடலை சுற்றி ஒளிவட்டம்!
உயிர்வாழ அனைத்து உயிர்களுக்கும் பிராண சக்தி மிகவும் அவசியம். இந்த பிராணம் விலகும்போது நோய் நம் உடலைத் தாக்குகிறது. உடலில் கழிவுகளை தங்கவைத்து நோயாளிகளாக மாற்றி உயிரையும் பறித்தும்விடுகிறது. பிராண சக்தியை உடலில் செலுத்தி கழிவுகளை அப்புறப்படுத்தினால் நோயில் இருந்து விடுபட முடியும். இதற்கான ஒரு சிகிச்சையே ‘பிராணிக் ஹீலிங்’ என்பது ஆகும். இந்த சிகிச்சை மூலம் சுலபமாக நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் மருந்தில்லாமல் தீர்வுபெறவும் முடியும், மேலும், தொலைவிலிருந்தும்கூட சிகிச்சை அளிக்க முடியும் என்கின்றனர், அதன் மருத்துவர்கள்.
பிராணிக் ஹீலிங் சிகிச்சை ஆரோக்கியமான, மகிழ்ச்சியான நிலைக்குக் கொண்டு செல்லும். தவிர ஒற்றைத்தலைவலி, சர்க்கரை வியாதி, சளி, காய்ச்சல், சைனஸ், ஆஸ்துமா, முதுகுவலி, ரத்த அழுத்தம், மனரீதியான நோய்களும் குணமாகும். மன அழுத்தம், பதற்றம், துக்கம், மன எரிச்சல், மனச் சோர்வு, தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடவும் முடியும்.
இப்பயிற்சியை யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அடிப்படை, உயர்நிலை, மனவியல், ஆத்மாவை உணருதல் என 4 கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிலையையும் 2 நாட்களில் கற்றுக் கொள்ளலாம் என்கின்றனர், அதன் பயிற்சியாளர்கள். சீனாவை பூர்வீகமாக கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் சோவா கோக்சூயி என்பவர்தான் பிராண ஹீலிங் சிகிச்சையை கண்டுபிடித்தவர் எனவும், இந்த சிகிச்சை, உலகம் முழுவதும் 130 நாடுகளில் பின்பற்றப்படுவதாகவும், மருத்துவர்கள் கைவிட்ட நோயாளிகளையும் இந்த முறையில் எளிதாகக் குணப்படுத்த முடியும் என்கின்றனர், அதன் பயிற்சியாளர்கள்.
நம் உடலைச் சுற்றி 5 அங்குலம் வரை ஆரா எனப்படும் ஒளிவட்டம் காணப்படுகிறது. உடலில் ஏதாவது பாதிப்பினால், வியாதிகள் உருவாகும் நிலை ஏற்படும்போது, இந்த ஒளிவட்டம் பாதிப்படைகிறது. ரஷ்ய விஞ்ஞானி கிரிலான் என்பவர் இந்த ஒளி வட்டத்தைப் படமாகக்கூட எடுத்துக்காட்டியுள்ளார். அப்போது பிரானிக் ஹீலர், நம்மைத் தொடாமல், அவர்களின் பிராண சக்தியைப் பயன்படுத்தி, பாதிப்புகளை நீக்கி, இந்த ஒளிவட்டத்தை, சீரடைய வைப்பார்கள்.
இதன்மூலம், உடலின் ஒளிவட்டம் மீண்டும் முழுமையடையும்போது, உடலில் ஏற்பட்ட வியாதிகளின் பாதிப்புகள் யாவும் விலகுகிறது. உடலில், வியாதிகள் தோன்றிய இடத்திற்கு நேரே, தங்கள் கைகளை நீட்டிக் கொண்டு, தியானம் மூலம், தங்கள் ஆற்றலை, மற்றவர்களின் பாதிப்பு உள்ள இடத்தில் செலுத்தி, விரைவாக, குணமடையவைக்கிறார்கள். மூச்சை கவனித்து, முறையாக சுவாசித்து வர, உயிர் சக்தி மேம்படும், தியானத்தின் மூலம், உயிர் ஆற்றலை நம்மில் உணர முடியும். இந்த நிலையில், நமக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நாமே, களைந்துவிட முடியும்.
இந்த சிகிச்சையின்போது, தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ள 10 நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து வெளிவரும் மூச்சு வழியாக தன் நோயை வெளியே தள்ளுவதுபோல் மனக்கண்ணால் பார்த்தால் போதும். எந்த அளவு நல்லெண்ணத்துடன் நோய்ப்பட்ட சக்தியை விடாமுயற்சியுடன் கழிவுகளாக வெளியே தள்ளுவதுபோல் காட்சியாகப் பார்க்கிறோமோ, அந்த அளவுக்கு விரைந்து குணமாகிவிடுவோம். இதன்மூலம், உடலில் புத்துணர்வையும் ஒரு அமைதியையும், நாம் உடனடியாக உணர முடியும்.
நம் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்கள் உடலைத் தொடாமலேயே நம் உள்ளங்கைகளை நோயுள்ள பகுதியில் காட்ட வேண்டும். நம் கையிலிருந்து செல்லும் சக்தி அவர்கள் உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, அவர்கள் மூச்சை வெளியே தள்ளுவதுபோல கற்பனை செய்தால் போதும், நல்ல பலன் கிடைக்கும்.
இதில் பயிற்சி பெறப்பெற நோயாளியைப் பார்த்தவுடனேயே உடலைச் சுறியுள்ள ஒளிவட்டத்தில் எங்கே கோளாறு என்பதை நோயாளியின் உடலைத் தொடாமலேயே வெறும் கைகளால் ஸ்கேன் செய்து எளிதில் சிகிச்சை அளித்துவிடலாம். தியானம் செய்யும் பழக்கமுள்ளவர்கள் தினமும் தங்கள் உடலில் உள்ள கெடுதலான பொருட்கள் உருண்டு திரண்டு சாம்பல் நிறத்தில் தங்கள் மூச்சு வழியாக வெளியேறுவதாக கற்பனை செய்துவந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலைச் சுற்றியுள்ள ஆரோக்கிய கவசம் பாதுகாப்பாக இருக்கும்.
நேர்மறை எண்ணங்கள், பிறர்க்கு இறங்கும் மனநிலை, ஆழமான நம்பிக்கை ஆகிய உயர்வான ஒழுக்கங்களே, ஒருவரை எப்போதும், முகப்பொலிவுடனும், புத்துணர்வுடனும் உயிராற்றல்மிக்கவர்களாகத் தோன்றவைக்கின்றன. இதை, நாம் உறுதியுடன் கடைப்பிடித்து வந்தாலே, உடல் நலமும், மன நலமும் ஒருங்கே சீரடையப் பெற்று, ஒளிவட்டத்தின் ஜுவாலையோடு, நலமுடன் வாழலாம்.