வாழ்க்கை சுகமாகும்
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மந்திரச்சொல். எப்படிப்பட்ட வார்த்தை என்பதை பொறுத்துத்தான் நல்ல அல்லது கெட்ட பலன் கிடைக்கிறது.

இதற்கு மகாபாரதக் கதையில் ஓர் உதாரணம். தேவசிற்பி மயன் துணையுடன் பாண்டவர்கள் உருவாக்கிய இந்திரபிரஸ்தத்தை பார்வையிட வருகிறான் துரியோதனன். அரண்மனையில் பூக்கள் தூவிய வரவேற்பு என்று நினைத்து கால் வைக்க… அது தண்ணீர் தொட்டியில் நிரப்பப்பட்ட பூக்கள் என்று தெரியவருகிறது.
‘குருடரின் மகனுக்கும் கண் தெரியவில்லை போலிருக்கிறது’ என்று பரிகாசம் செய்கிறாள் திரெளபதி. அந்த சிரிப்புதான் அவளுடைய சேலை இழுப்புக்கும், குருஷேத்திரப் போருக்கும், அவளுடைய பிள்ளைகள் மரணத்துக்கும் காரணமாக அமைந்தது.
ஓட்டப்போட்டியில் கலந்துகொள்ள இருப்பவனிடம், ’மற்ற போட்டியாளர்களிடம் வெற்றிக்கான தாகம் தென்படவில்லை. உனக்குத்தான் வெற்றி’ என்று சொல்லிப் பாருங்கள். வழக்கத்தை விட நிச்சயம் கூடுதல் உத்வேகம் காட்டுவார். அதே நபரிடம், ‘இன்றைய போட்டியில் உனக்கு வெற்றி கிடைப்பது கடினம் தான்’ என்று சொல்லிப் பாருங்கள். நிச்சயம் தோற்றுப் போவார்.
ஒரு முரடனின் காலை மிதித்துவிட்டு, ‘மன்னிச்சுகோங்க தலைவரே’ என்று சொல்லிப்பாருங்கள். சிரித்தபடி நகர்வார். ஆக, வார்த்தையில்தான் உள்ளது நன்மையும் தீமையும். எனவே, ஒவ்வொரு வார்த்தை பேசும் முன்னரும் ஆயிரம் முறை யோசியுங்கள்.
ஒரே ஒரு வார்த்தை தவறாகப் பேசிவிட்டார் என்று உறவை முறித்துக்கொண்ட தம்பதி உண்டு. ஒரே ஒரு வார்த்தை பேசி காதலில் விழுந்தவர்களும் உண்டு. எனவே, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள்.
காலமும், பேசிய வார்த்தைகளும் திரும்ப வருவதில்லை.