• Home
  • சட்டம்
  • பவர் ஆஃப் அட்டர்னி யாருக்குக் கொடுக்கலாம்?

பவர் ஆஃப் அட்டர்னி யாருக்குக் கொடுக்கலாம்?

Image

சட்டம் தெரிஞ்சுக்கோங்க.


ரியல் எஸ்டேட் துறையில் முக்கியம் அங்கம் வகிப்பது, பவர் ஆப் அட்டர்னி. இந்த அதிகாரப் பத்திரத்தைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், சிக்கலாகிவிடும் என வழக்கறிஞர் எம்.நிலா எச்சரிக்கிறார்.  

பவர் ஆஃப் அட்டர்னி குறித்து நிலா,  “தனிநபர் ஒருவர், தனக்குள்ள அதிகாரத்தை மற்றொருவரிடம் தற்காலிகமாக ஒப்படைக்கும் ஒப்பந்தத்திற்கு பவர் ஆஃப் அட்டர்னி என்று பெயர். மாறிவரும் இன்றைய உலகத்தில் பவர் ஆஃப் அட்டர்னிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பொதுவாக  பவர் ஆஃப் அட்டர்னியில், பொது பவர் ஆஃப் அட்டர்னி, சிறப்பு பவர் ஆஃப் அட்டர்னி என இரண்டு வகை  உள்ளன.   ஒன்றுக்கு மேற்பட்ட விவகாரங்களில் பி.ஓ.ஏ. எழுதிக் கொடுத்தவருக்கு ஆதரவாகச் செயல்படுபவருக்கு பொது பவர் ஆப் அட்டர்னி அல்லது ஜெனரல் பவர் ஆப் அட்டர்னி என்று பொருள். வங்கிக் கடன் பத்திரத்தில் கையெழுத்து போடுவது, எல்.ஐ.சி.பாலிசி பணம் பெறுவது உள்ளிட்டவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

தவிர்க்க முடியாத நிலையில் தனக்கு சொந்தமான சொத்தை விற்பனை செய்வது தொடர்பான விவகாரங்களில் ஈடுபட தனிநபர் அல்லது கூட்டாகச் செயல்படும் ஏஜென்சிகளுக்கு அதிகாரம் எழுதிக் கொடுப்பதை சிறப்பு பவர் ஆப் அட்டர்னி என்று கூறப்படுகிறது.
சொத்து பரிமாற்றத்தில் உரிமையாளர் நேரடியாகப் பரிமாற்ற விவகாரங்களில் ஈடுபட முடியாத நிலையில், பவர் முகவர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதில், தந்தையின்  சொத்துக்கு மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் பவர் முகவராக இருக்கலாம். அதேபோன்று, குடும்ப உறவினர் அல்லாத வெளிநபர்களையும் பவர் முகவராக நியமிக்கலாம்.
இதில், வெளிநபரை பவர் முகவராக நியமிக்கும்போது ஏற்படும் சிக்கல்களைப் பல்வேறு சமயங்களில் பார்த்திருக்கிறோம். ஒருவர், எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் பவர் தரலாம். பவர் கொடுப்பதால், உரிமையாளரது உரிமை எந்த வகையிலும் பறிபோகாது.

 உதாரணமாக, ஒரு வீட்டை விற்பதற்கு ஒருவருக்கு அதிகாரம் தந்திருந்து, அவர் அந்த வீட்டை விற்கத் தாமதமாகிற நிலையில், அவருடைய அதிகாரப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டுத்தான், அந்த வீட்டை விற்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அதேநேரத்தில், குடும்பத்துக்குள் ஒருவர் பவர் முகவராக நியமிக்கப்படும்போது, சொத்து விஷயத்தில் பிரச்சினைகள் எழலாம்.


உரிமையாளர் ஒருவர் தன் சார்பில், தனது சொத்தை விற்க குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை பவர் முகவராக நியமிப்பதில் என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது எனப் பலரும் நினைக்கலாம். வெளிநபரைவிட, குடும்பத்தினர் நம்பகமானவராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், உரிமையாளரின் சொத்துக்கு வாரிசாகும் தகுதி உள்ளவர்களில் ஒருவர் பவர் முகவராகும்போது  பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.


குறிப்பாக, தந்தை தன் பெயரில் உள்ள சொத்தை விற்க அல்லது அதை மேம்பாட்டுப் பணிகள் செய்ய மகனை முகவராக நியமிக்கிறார். இது, தற்காலிக ஏற்பாடாகவே பார்க்கப்படுகிறது. இதன்படி, சம்பந்தப்பட்ட துறைகளை அணுகி பவர் முகவர் தனக்கு அளிக்கப்பட்ட பணியை முடிக்கலாம். ஆனால், இந்தக் காலகட்டத்தில், சொத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால், பவர் பத்திரம் வாயிலாக வந்த அதிகாரம், முகவரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதைத் தவறாகப் பயன்படுத்த அந்த முகவர் நினைத்தால், மற்ற வாரிசுகளின் உரிமைக்கு மாறாக, சொத்தை கைப்பற்ற முடியும்.

 உரிமையாளர் இறந்ததால், பவர் பத்திரம் செயலிழந்துவிட்டது என்பதை சட்டரீதியாக உறுதிசெய்து பவர் முகவரை கட்டுப்படுத்த மற்ற வாரிசுகள் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்

எச்சரிக்கையாக எடுக்கவேண்டிய நடவடிக்கை.

  • எம்.நிலா, உயர்நீதிமன்ற வழக்கறிஞர், மதுரை மற்றும் சென்னை. தொடர்புக்கு  :72997 53999

Leave a Comment