கவித்துவம்
பக்கம் பக்கமாக சொல்லவேண்டியதை எல்லாம் சுருக்கமான வார்த்தைகளில் நறுக்கென சொல்வதே கவிதை. சில கவிதைகள் நெஞ்சுக்குள் நுழைந்து மனதைப் பிசைந்துவிடும். அப்படிப்பட்ட சில கவிதைகள்.
பணம்
பணம் என்ன செய்யும்
சொந்தங்களின் நிகழ்ச்சிகளில்
உங்களின் இடத்தை முடிவு செய்யும்
கோவில் தரிசனத்தின் தூரத்தையும்
நேரத்தையும் முடிவுசெய்யும்
மருத்துவ தரத்தில் தலையீடும்
திருமண வயதை குறிக்கும் சோதிடனாகும்
கடன் கேட்கவைத்து தன்மானத்தை தனதாக்கும்
- ராம்கமல்
…………………………….
கொஞ்சம் போதும்
இந்த உலகில் ஒரு மனிதன்
சாதாரணமாக வாழ்வதற்கு
கொஞ்சம் உறவுகள்
கொஞ்சம் நட்புகள்
கொஞ்சம் ஆதரவுகள்
கொஞ்சம் கருணை
கொஞ்சம் புன்னகை
கொஞ்சம் கண்ணீர்
கொஞ்சம் பாசம்
கொஞ்சம் பணம்
முக்கியமாக சூழ்நிலைக்கு ஏற்ப
கொஞ்சம் முகங்கள்…!!
- பாத்திமா மௌனா ரூமி
