நாகரிக நோய்கள்
பெண்களிடமிருந்து பிரிக்கமுடியாத அங்கமாக பிரா மாறிவிட்டது. தேர்வு செய்வதில், அணிவதில் நிறைய அசெளகர்யங்கள் இருந்தாலும், அதனை யாரும் தவிர்ப்பதே இல்லை. பிரா அணியவில்லை என்றால் மார்பகத்தின் அமைப்பு சீர்குலைந்துவிடும், அழகு குறைந்துவிடும் என்ற அச்சத்தினாலே பெண்கள் விடாப்பிடியாக பிரா அணிகிறார்கள். ஆண்கள் பார்வையில் தங்கள் மார்பகம் கவர்ச்சிகரமாகத் தெரியவேண்டும் என்பதற்காகவும் பிரா அணிகிறார்கள்.
பெண்களுக்கு முதலில் மார்பகம் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். மார்பகம் என்பது கொழுப்பினாலும், பால்சுரப்பிகளைக் கொண்ட திசுக்களின் தொகுப்பு. சிலருக்கு பால் சுரப்பு திசுக்கள் அதிகமாகவும், கொழுப்பு திசுக்கள் குறைவாகவும் இருக்கலாம். மற்ற சிலருக்கு கொழுப்பு திசுக்கள் அதிகமாகவும், பால் சுரப்பிகளைக் கொண்ட திசுக்கள் குறைவாகவும் இருப்பதால், ஒவ்வொருவரின் உடல் அமைப்பை பொறுத்து அளவு மாறுபடுகிறது. வயது மூப்படையும் போது திசுக்கள் தளர்வு அடைவது என்பது இயற்கை.
பெரிய மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு, இயல்பாகவே மார்பக சரிவு ஏற்படுகிறது. எனவே பிராக்கள் அணிவது அவர்களுக்கு தற்காலிகமாக சௌகரியம் கொடுக்கிறது. இதனால் அவர்களுக்கு ஏற்படும் முதுகு வலி போன்ற பிரச்னைகளையும் தவிர்க்க முடியும். அதுவே சிலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினால், அவர்கள் அணிய தேவையில்லை.
பிரா மட்டுமின்றி எந்தவொரு ஆடையும் இறுக்கமாக அணியும்போது, அதனால் தோல் பகுதிகளில் தடுப்புகள் ஏற்படலாம். மேலும் வியர்வையினால் அந்த இடங்களில், அரிப்பு, எரிச்சல் ஏற்படலாம். தொடர்ச்சியாக மிக இறுக்கமான உள்ளாடைகள் அணியும்போது அவர்களுக்கு மார்பகப் பகுதிகளில் வலி ஏற்படலாம். எனவே பெண்கள் சரியான அளவில் பிராக்களை தேர்ந்தெடுத்து அணிய வேண்டியது அவசியம். அதேநேரம், இறுக்கமான பிராவால் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் என்பது பொய்யான நம்பிக்கை.
உண்மை என்னவென்றால், பிராக்கள் அணிவது மார்பகங்களில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை. அதாவது ஆடை அணிவதால் உடலுக்கு நன்மையும் இல்லை, தீமையும் இல்லை என்பது போலவே பிரா அணிவது நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை. மனதளவில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கொடுக்கிறது என்றால் அதனை பயன்படுத்தலாம். அசெளர்யமும் எரிச்சலும் கொடுக்கிறது என்றால் அணிவதைத் தவிர்க்கலாம்.
சரியான அளவு பிரா அணியாத காரணத்தாலே மார்பகம் தளர்வு அடைவதாக சிலர் வருத்தப்படுகிறார்கள். உண்மை என்னவென்றால் ஒவ்வொரு நாளும் அதாவது 25 வயதுக்குப் பிறகு மார்பகம் தளர்வு அடைவது இயற்கை. அதுவும் குழந்தைகள் பிறந்த பிறகு அதிவேகமாக தளர்வுக்கு ஆளாகிறது. இதனால் பெண்களுக்கு எந்த தொந்தரவும் பிரச்னையும் இல்லை என்றாலும், ஆண்களுக்கு தங்கள் மீதுள்ள ஈர்ப்பு குறைந்துவிடும் என்பதாலே பிராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
பாலூட்டுவதால் மட்டும்தான் மார்பகங்கள் தளர்வடைகிறது என்ற தவறான எண்ணம் காரணமாக இளம் தாய்மார்கள் பால் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். இந்த எண்ணமும் உண்மையில்லை.
பிரா போலவே மார்பகங்கள் தளர்வைப் போக்கும் கிரீம்களும் இப்போது அமோகமாக விற்பனையாகின்றன. இந்த கிரீம்கள் எல்லாமே போலியானவை. ஏனென்றால் எந்த கிரீம்களாலும் நிச்சயம் மார்பக தளர்வுகளைத் தடுக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இயற்கையாக உடலில் நடக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வர வேண்டும்.
சிறிய மார்பகங்கள் குறித்தும் மிகப்பெரும் மார்பகங்கள் குறித்தும் பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருப்பதுண்டு. சரியான உடல் அமைப்பு, சரியான மார்பக அளவு என்று எதுவும் கிடையாது. அவரவர் உடல் அமைப்புக்கு ஏற்ற மார்பகங்கள் உருவாகியிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டு, அதை மதிப்பதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பெரிய அளவிலான மார்பகங்கள் உடையவர்கள், இதனை குறைப்பதற்கு அறுவை சிகிச்சை வரையிலும் முயற்சி செய்கிறார்கள். அதேபோல் சிறைய மார்பகம் உள்ளவர்கள் சிலிக்கான் மூலம் பெரிதாக்க முயற்சி எடுக்கிறார்கள். இவை, எதுவுமே தேவையில்லை, மார்பகம் பற்றிய பார்வையே வீண் கற்பனை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சிறிய மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு தாய்ப்பால் குறைவாக சுரக்கும் எனவும், பெரிய மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் எனவும் மற்றொரு பொய் நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது குழந்தைக்குப் பாலூட்டுவதற்கு தேவையான அளவு பால் சுரக்கின்றன. எனவே, அதற்காக மட்டுமே மார்பகங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தங்களுக்கு அமைந்திருக்கும் மார்பகத்தை நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மட்டுமே முக்கியம். குறிப்பாக மார்பகப் புற்றுநோயிலிருந்து பெண்கள் தங்களை தற்காத்து கொள்வதற்கு மாதம் ஒருமுறை வீட்டிலேயே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் முடிந்த பிறகு, பெண்கள் தங்களுடைய கைகளினால் மார்பகங்கள் முழுவதும் தொட்டுப் பார்க்க வேண்டும். எங்கேனும் வித்தியாசமாக உணர்ந்தால், கட்டி போல தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
குறிப்பாக 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இந்த பரிசோதனையை கட்டாயம் மாதம்தோறும் செய்துகொள்ள வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஒருமுறை மேமாகிராம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். முன்கூட்டியே கண்டறிவதால் பல பிரச்னைகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.
பெரும்பாலான பெண்களுக்கு சரியான அளவிலான பிரா தேர்வு செய்வதிலும், சரியாக அணிவதிலும் குழப்பம் உள்ளது. இரண்டு மார்பகமும் ஒரே போன்று இல்லை என்ற குறை இருக்கிறது. வசதியான, சரியான பிரா அணியவில்லை என்றால்,. இறுக்கமான பிரா அணிந்தால் விலா எலும்பு பகுதியில் வலி, வியர்வை வெளியேறுவதில் சிக்கல், தோல் அரிப்பு, ரத்த ஓட்டத்திற்கு இடைஞ்சல் போன்ற சிக்கல் ஏற்படலாம்.
ஒருமுறை சரியான அளவில் பிரா அமைந்துவிட்டால், அதே அளவை பல ஆண்டுகளுக்குப் பின்பற்றுவது தவறு. அவ்வப்போது, உங்கள் மார்பக அளவை பொறுத்து அளவை மாற்றிக்கொள்வதுதான் சரி. அதோடு பிரா அணிந்தால், மார்பக சரிவைத் தடுக்கலாம் என்பது கட்டுக்கதை. அதேபோல், பிரா அணிந்தால், பால் கட்டிக்கொள்வதைத் தடுக்கலாம் என்பதும் உண்மை அல்ல. பாலூட்டும் மாதங்களில் மார்பகங்களின் அளவு அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், குழந்தைக்குப் பால் கொடுப்பது, அதிகமான பாலை வெளியேற்றுவது தவிர பால்கட்டுவதை தடுக்க வேறுவழியில்லை
ஒரு சிலர் ‘அண்டர் வையர்டு பிரா’ (Under wired bra) அணிகிறார்கள். அதை அணியும் நேரம்தான் அதன் விளைவை தீர்மானிக்கும். வையர்டு பிராவில் மார்பகத்தின் கீழ்பகுதியை உயர்த்துவதற்காக வையர் பொருத்தப்பட்டிருக்கும். நீண்ட நேரம் அதனை அணிவதால், மார்பகத்திற்கு அழுத்தம் கொடுப்பது நல்லதில்லை. மார்பக புற்றுநோய் வருவதை பிரா தடுக்கிறது என்பதோ அல்லது பிரா தடுக்கவில்லை என்பதும் உண்மை இல்லை.
பிரா அணியாமல் இருப்பதே சுதந்திரம் என்ற எண்ணம் பெண்களுக்குத் தோன்றுவதே நல்லது. அதிகபட்சம் குழந்தைகள் பிறந்த பிறகாவது பிராவில் இருந்து விடுதலை பெறுவது பெண்களுக்கு நல்லது.