ஞானகுரு தரிசனம்
ஞானகுருவை சந்தித்த ஒருவன், ‘’நான் ரொம்பவே பிஸி… எனக்கு சுருக்கமாக வாழ்க்கையை புரிய வையுங்களேன்’’ என்று கேட்டான்.
’’உன் பிஸியான நேரத்திலும் வாழ்க்கை பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுவது விசித்திரம்தான். ‘நீ நிகழ்காலத்தில் வாழு’ அது போதும்’’ என்று கூறினார்.
’’நான் நிகழ்காலத்தில்தானே வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்… கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள்’’ என்றான்.
’’பொதுவாக எதிலும் அவசரம் என்பதுதான் மனிதகுணம். குழந்தையாக இருக்கும்போது சீக்கிரம் வளர்ந்து பெரியவனாக ஆசைப்படுகிறான். ஆனால் அவனே வளர்ந்த பிறகு, குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று கடந்த காலத்தில் வாழ்கிறான். பணத்தை தேடி உடல்நலனை இழக்கிறான். அதன்பிறகு இழந்த உடல் நலத்தை திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான். எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது. சுருக்கமாகச் சொல்வது என்றால் சாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக வாழ்வதற்கு ஆசைப்படுகிறான். ஆனால், வாழ்வதற்குத் தெரியாமலே செத்துப் போகிறான்’’ என்றார் ஞானகுரு.
’’நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்… ஆனால் வாழ்க்கை கஷ்டமாக இருக்கிறது, உறவுகள் சிக்கலாக இருக்கிறது. என்னதான் செய்ய வேண்டும்..?’’
’’உன்னிடம் இன்னுமா நேரமிருக்கிறது’’ என்றபடி புன்னகையுடன் பேசத்தொடங்கினார் ஞானகுரு.
‘’குடும்பத்தில், அலுவலகத்தில், உறவுகளில், நட்பு வட்டாரத்தில் எல்லோரும் உன்னை நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே… ஆனால், பிறர் நேசிக்கும் அளவுக்கு நடந்துகொள். ஏனென்றால் எல்லோருக்கும் தங்கள் நேசத்தை சரியாக வெளிப்படுத்தத் தெரியவில்லை. ஒருவர் அன்பு காட்டுவதை சொல்லத்தான் வேண்டும் என்று அவசியம் இல்லை, அவரது நடவடிக்கையில் நீயே உணர்ந்துகொள்ள முடியும்.
நீ எவ்வளவு சம்பாதித்தாய் என்பது யாருக்கும் முக்கியம் அல்ல, அவற்றை எப்படி சம்பாதித்தாய் என்பதில்தான் மதிப்பு தோன்றுகிறது. எந்த ஒன்றையும் வேறு ஒன்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏமாற்றமே அடைவாய். எந்த ஒருவரையும் வேரு ஒருவருடன் ஒப்பிடுவது, இருவரையுமே அவமானப்படுத்தும் செயல். தேவைப்படும் எல்லாமே கிடைத்தால்தான் நிம்மதியாக வாழமுடியும் என்று நினைக்காதே… தேவைகள் குறைவாக இருந்தாலே நிம்மதி தானே வந்துவிடும்.
உனக்குப் பிடித்த ஒன்று எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்காதே… ஒவ்வொரு நபரின் பார்வையும் வேறுவேறாக இருக்கும் என்பதை அறிந்துகொள். உன் முடிவை பிறர் மீது திணிக்காதே. தவறு செய்துவிட்டதற்காக ஒருபோதும் வருந்தாதே, அந்த தவறு மீண்டும் நிகழ்ந்துவிடாமல் உறுதியாக இரு. யார் உனக்கு தீமை செய்தாலும் அதனை மன்னித்துவிடு. அவர்கள் செய்த தீமையை மறக்காவிட்டால் அது உன் மனதில் முள் செடியாக மாறி, உன்னை குத்திக்கொண்டே இருக்கும். குறைந்த ஞாபசக்தியே உனக்கு நல்ல ஆரோக்கியம் தரும். குறுக்கு வழியில் அல்லது அவசரமாக வாழ்க்கையை புரிந்துகொள்ள நினைக்காதே… ஏமாந்துபோவாய்…”
பயணம் செல்வதை மறந்து அமர்ந்திருந்தான் புது மனிதன்.