கவித்துவம்
சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்
தெய்வங்கள்
ஒரு தெய்வம்
வாகை மரத்தின் கீழ்
பதநீரும் நொங்கும் விற்கிறது.
புனிதமேரி தெருமூலையில் ஒன்றுக்கு
புதன் கிழமையில் மீன் வியாபாரம்.
பொது மருத்துவமனைப் பக்கம் ஒன்று
தோளில் சார்த்திய குளிர்ந்த பிள்ளையுடன்.
முடிதிருத்துகிற ஒரு தெய்வம்
செவ்வாய்க் கிழமை ஓய்வெடுத்துக் கொள்கிறது.
பித்துற்றுப் பேசி ஒன்று
பச்சைப்பழஞ்சேலையுடன் அலைகிறது.
நான்கு கால் தெய்வம் ஒன்று
நடைபாதையில் குட்டியுடன் படுத்தபடி.
தன்னைக் காட்டாது பறக்கும் தெய்வமோ
என் மீது சூடாக எச்சமிடுகிறது.
சிறு தெய்வமோ, பெருந்தெய்வமோ
கோவிலுக்கு வெளியேதான்
கும்பிடுகிறேன் அனைத்தையும்
- கல்யாண்ஜி
பூரணம்
கச்சிதத்தைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?
நிலவு கூட பூரணமாக இல்லை. பூரணமாக இருக்கிறது.
கடல் வியக்கத்தக்க வகையில் அழகாக இருக்கிறது,
ஆனால் ஆழத்தில் உப்பாகவும் இருட்டாகவும் இருக்கிறது.
வானம் எப்போதும் எல்லையற்றதாக இருக்கிறது,
ஆனால் பெரும்பாலும் மேகமூட்டம்.
எனவே, அழகான அனைத்தும் கச்சிதமானது அல்ல, அது சிறப்பானது.
எனவே, ஒவ்வொரு பெண்ணும்
யாருக்காவது சிறப்பானவராக இருக்க முடியும்.
சரியாக இருப்பதை நிறுத்துங்கள்,
ஆனால் சுதந்திரமாக இருந்து வாழ முயற்சி செய்யுங்கள்,
மற்றவர்களை ஈர்க்க விரும்பாமல்,
உங்களுக்கு பிடித்ததை செய்து வாழ முயற்சி செய்யுங்கள்.
- பாப் மார்லே
காதல்
கொடுப்பதும் அல்ல
பெறுவதும் அல்ல.
சொல்வதும் அல்ல
கேட்பதும் அல்ல.
வேண்டுவதும் அல்ல
மறுப்பதும் அல்ல
ஈட்டுதலும் அல்ல
இழத்தலும் அல்ல,
காதலென்பது
இருப்பது….
- சீனிவாசன்
சுமை
நாடகம் என உணர்ந்தவருக்குத்தான்
ஒப்பனையை நீக்குவது சுலபம்.
உண்மை என நம்பியவருக்கு
அது வாழ்நாள் சுமை…!
- வெ.பூபதி