எதிர்க்கட்சிகள் சதி பண்ணிட்டாங்களாம்
தி.மு.க. அரசின் கையாலாகத்தனத்தால் இரண்டாவது முறையாக கள்ளச்சாராய மரணம் நடந்திருக்கிறது. ஸ்டாலினே இது தோல்வி என்று ஒப்புக்கொண்டு சட்டசபையில் பேசியிருக்கிறார். ஆனால், ஸ்டாலினுக்கு ஜால்ரா போடும் காங்கிரஸ்காரர்கள் இந்த விஷயத்திலும் தி.மு.க. அரசுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள்.
காங்கிரஸ் தலைவரான பீட்டர் அல்போன்ஸ், ‘’கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விஷ சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் கோகுல்தாஸ் கமிஷனை வரவேற்கிறேன்.
விசாரணை கமிஷன் இந்த பரிதாபகரமான சாவுகளை அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும்.இந்த சாவுகள் ஏற்பட்ட நேரம் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. பாராளுமன்ற தேர்தலில் நாற்பது இடங்களிலும் வெற்றி பெற்று ,வெற்றி நாயகராக சட்டமன்றத்திற்கு வந்து பெருமிதத்தோடு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அறிவிக்க தயாராக இருந்த வேளையில் அரசின் நல்ல பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த மரணங்களுக்கு பின்னால் அரசியல் சதி ஏதும் உள்ளதா என்ற கோணத்திலும் கமிஷன் விசாரிக்க வேண்டும்.
கள்ள சாராயத்தை விற்பவர்கள் மரணத்தினை ஏற்படுத்தும் விஷத்தை கலக்க மாட்டார்கள் என்று சிலர் தெரிவிக்கின்ற கருத்துக்களையும் பரிசீலிக்கவேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும், காமராஜர் ஆட்சி நடக்க வேண்டும் என்று ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தீயாக உழைக்கும் நேரத்தில் தி.மு.க.வுக்கு கொடி பிடிக்கும் இப்படிப்பட்ட காங்கிரஸ் தலைவர்களும் இருக்கிறார்களாம்.
பீட்டர் அல்போன்ஸ் போன்ற காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் தி.மு.க. ஸ்லீப்பர் செல்களால் கட்சிக்கும் பிரயோஜனம் இல்லை, மக்களுக்கும் பிரயோஜனம் இல்லை. முதுகெலும்பு இருக்குதான்னு பாருங்க பீட்டர்.