சில்வெஸ்டர் ஸ்டாலோன்.
கடவுளே, அஜித்தே என்று ஒரு கும்பல் நீண்ட காலமாக தமிழகத்தில் இருக்கிறது. விடாமுயற்சி என்றால் அவர்களுக்குத் தெரிந்தது நடிகர் அஜித் நடித்த படமும், சினிமாவில் வருவதற்கு அஜித் எடுத்துக்கொண்ட விடாமுயற்சிகளும் மட்டும் தான்.
விடா முயற்சிக்கு சரியான உதாரணம் யார் தெரியுமா..?
அவர், ‘ராக்கி’, ‘ரேம்போ’ போன்ற கதாபாத்திரங்களில் நடித்து கோடிக்கணக்கான மக்களின் மனதைக் கொள்ளையடித்த நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன். நடிகர், குத்துச்சண்டை வீரர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர், ஓவியர், தன்னம்பிக்கை பேச்சாளர் என்றெல்லாம் அடையாளம் காட்டப்படுபவர்.
சினிமாவில் போன்று அவரது வாழ்க்கையில் வெற்றி அவருக்கு எளிதாகக் கிடைக்கவில்லை.
ஸ்டாலோன் பிறக்கும் போதே அவருக்கு சோதனை. குழந்தை வெளியே வருவதில் பிரச்னை இருந்ததால் போர்செப்ஸ் கருவியின் மூலம் அவரை வயிற்றிலிருந்து வெளியே இழுத்தார்கள். அப்போது நரம்பு பாதித்தது.. முகத்தில் சில பாகங்களில் செயலற்று போனது. குறிப்பாக உதடு, தொண்டை, இடது முகவாய்கட்டை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பார்வை மற்றும் பேச்சும் பாதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் தந்தை பிரிந்துபோகவே, தாயினால் வளர்க்கப்பட்டார். முகம் பேச்சு காரணமாக பள்ளியில் சக மாணவர்களின் கேலிப் பொருளானார்.
தன்னை கேலி செய்யும் மாணவர்களைப் பயமுறுத்த வேண்டும் என்பதற்காக பாடி பில்டிங் பயிற்சிகளில் ஈடுபட்டார். நல்ல உடற்கட்டு கிடைத்ததும் கேலி செய்தவர்களே ஆச்சர்யமாக நெருங்கி வந்தார்கள். இந்த நேரத்தில் ஆக்ஷன் நடிகர் ஆகும் ஆசை உருவானது. எந்த வேடம் கிடைத்தாலும் நடிக்கத் தயாராக இருந்தார். சின்னச்சின்ன வேடங்களே கிடைத்தது. ஆனாலும் சினிமா கனவுடன் சுற்றிக்கொண்டு இருந்தார்.
அபார்ட்மெண்ட் வாடகை கொடுக்க முடியாமல் ரோடுகளில் தங்கியிருக்கிறார். ஆசை ஆசையாக வளர்த்த செல்ல நாயையும் விற்று சாப்பிடும் அளவுக்குப் போன பிறகும் ஸ்டோலனின் சினிமா கனவு குறையவே இல்லை.
இந்த நிலையில் 1975, மார்ச் 24 அன்று உலகப் புகழ்பெற்ற வீரர்கள் முகமது அலியும், சக் வெப்னரும் மோதிக்கொண்ட ஒரு சண்டையை டிவியில் பார்த்தார். அந்த சினிமா அவருக்குள் மிகப்பெரும் பாதிப்பை உருவாக்கியது. குத்துச் சண்டையை மையமாக வைத்து ஒரு ஸ்கிரிப்ட் எழுதும் பரபரப்பு தோன்றியது. உடனே தன் மனதில் தோன்றிய கதைக்கு திரைக்கதை எழுதினார். கிட்டத்தட்ட 20 மணி நேர உழைப்பில் ராக்கி படத்துக்கு முழு திரைக்கதை, வசனம் எழுதிவிட்டார்.
இந்த கதை மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கை ஸ்டோலனுக்கு இருந்தது. ஆகவே, தயாரிப்பாளர்களைத் தேடிப் போய் கதை சொன்னார். கிட்டத்தட்ட ஆயிரம் பேரிடம் கதை சொல்லியிருப்பார். ஒவ்வொரு நபரும் ஒரு காரணம் சொல்லி தட்டிக் கழித்தார்கள். சிலர் கதையை மட்டும் வாங்கிக்கொள்ள முன்வந்தார்கள். ஆனால், நானே ஹீரோவாக நடிப்பேன் என்பதில் சில்வெஸ்டர் உறுதியாக இருந்தார்.
கடைசியில் ஒரு தயாரிப்பு நிறுவனம் 1,25,000 டாலருக்கு கதையை வாங்க முன் வந்தது. ஆனாலும் வேறு ஒருவரை ஹீரோவாகப் போடலாம், அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கலாம் என்று சமாதானம் செய்தார்கள். ஸ்டோலென் அசையவில்லை. எனவே, கதையை மூன்று மடங்குக்கு வாங்குவதாகச் சொன்னார்கள். அதற்கும் ஸ்டோலென் மசியவில்லை. அப்போது நண்பர்கள் சிலர் ஸ்டோலெனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றே நினைத்தார்கள். இந்த பணத்தை வாங்கிக்கொண்டால், இதேபோய் நூறு கதை எழுத முடியும் என்று சொல்லி சம்மதிக்கச் சொன்னார்கள்.
ஆனால், ஸ்டாலோன் உறுதியாக இருந்தார். அந்த ஸ்டூடியோவினருக்கு ஸ்டாலோனின் கதை மிகவும் பிடித்திருந்தது. அதனால் குறைந்த செலவில் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார்கள். அதன் பின்னர் நடந்ததெல்லாம் உலகமறிந்த வரலாறு. ஒரு மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு, 200 மில்லியன் டாலரை சம்பாதித்துக் கொடுத்தது ராக்கி. சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதுடன், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த எடிட்டிங் ஆகியவற்றுக்கான ஆஸ்கார் விருதுகளையும் தட்டிச் சென்றது.
அடுத்த 20 வருடங்களுக்கு, 1990-களின் கடைசி வரையில், ஸ்டாலோன் தயாரிப்பாளர்களின் காமதேனுவாகவே விளங்கினார்… அவருடைய படங்கள் பில்லியன் கணக்கில் டாலர்களை குவித்தன. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இன்றும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் ஸ்டோலென்.