நோய் என்று எதுவும் இல்லை
’நூறு ஆண்டுகள் நாம் சேர்ந்தே வாழவேண்டும்… அடுத்த பிறவியிலும் நாம் ஜோடியாகப் பிறக்கவேண்டும்’ என்றெல்லாம் காதலுடன் களிக்கும் அதே தம்பதியரில் ஒருவரே பின்னொரு கட்டத்தில், ‘இன்னும் இழுத்துக்கிட்டே உசுரை வாங்குது… ஒரேயடியா செத்துத் தொலைஞ்சா நிம்மதியா இருக்கலாம்…’ என்று சலித்துக் கொள்வார்கள். இதுவே வாழ்க்கை.
இதில் அச்சத்திற்கோ, ஏமாற்றத்திற்கோ இடமில்லை. அந்தந்த தருணத்திற்கு ஏற்ப மனிதர்கள் மாறிக்கொள்வார்கள். இதையே பட்டினத்தார் பாட்டாக பாடி வைத்தார்.
உணவை தான் சாப்பிட்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடு தானே இருந்தேன் எப்படி இறந்து போனேன்? மலம் தான் உணவாக இருந்ததா? மரணம் தான் வாழ்வாய் இருந்ததா?
இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த சுருங்கும் மார்புகளுக்கா இத்தனைக் கண்கள் வட்டமிட்டது? பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும் என்று பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வைத்தானா?
இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன். நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருக்கின்றன. இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும்.
அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன். பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன். காலம் கடந்த ஞானம்.
பாயும், நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்? பிணமான பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொண்டாடவா முடியும்..? சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?
கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், என் உயிரே என்று சொன்ன மனைவியும் பிணமானபின் உடன் வரப் போகிறார்களா?
பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசி சென்றப் பிறகு , மண் என்னைப்பார்த்து, ‘மகனே! நானிருக்கிறேன். என் மடியில் வந்து உறங்கு’ என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது. ஆகவே உலகே பொய் வாழ்க்கை.
நீ நீயாக இரு… உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. வயதானால் அந்த நோய் வரும், இந்த நோய் வரும் என்று சொன்னால் தயவு செய்து நம்பாதீர்கள்.
உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது. எந்தப் பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் உணவு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்துக்கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ, உணவோ கேட்பதில்லை. மரணம் அடையும் நாள் வரை தன் வேலைகள் அனைத்தையும் செய்து கொள்கின்றன. மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். முதுமை என்று எதுவும் இல்லை. நோய் என்று எதுவும் இல்லை. இயலாமை என்று எதுவுமில்லை. எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது. சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிப் போகிறீர்கள்.
நான்… நான்… நான்…
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் வீடு கட்டினேன்.
நான் உதவி செய்தேன்,
நான் உதவி செய்யலனா அவர் என்ன ஆகுறது!
நான் தான் வேலை வாங்கிக் கொடுத்தேன்.
நான்.. நான்.. நான்.. என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!
நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று சொல்ல முடியுமா?
நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் சேர்க்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ, இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே “நான்” என்று சொல்வதற்கு முழு அதிகாரமும், உரிமையும் உண்டு. ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள். உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே, தாழ்வு மனப்பான்மை வரும். உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே, தலைக்கனம் வரும்.
உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு.
தன்னம்பிக்கை தானாய் வரும்.