பூச்செடி போல பிள்ளையை வளர்க்காதீங்க

Image
  • குழந்தை வளர்ப்பு ரகசியம்

இன்று பெரும்பாலான வீடுகளில் ஒற்றைப் பிள்ளை மட்டுமே இருக்கிறது. ஆகவே, அந்த பிள்ளைக்கு கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதுடன் நில்லாமல், எந்த வேலையையும் செய்ய விடாமல் உட்காரவைத்து அழகு பார்க்கிறார். இப்படி பூச்செடி போன்று குழந்தைகளை வளர்ப்பதால், சின்ன காற்றடித்தால்கூட, அந்த பூச்செடி வாடி வடுகிறது.

சமீபத்தில் ஒரு பெண்மணி, ‘சார் என் குழந்தைக்கு 10 வயசாகப் போகுது. இன்னும் ரைட், லெஃப்ட் ஷு சரியா போடத் தெரியாது, தலை சீவத் தெரியாது… நான் தான் இன்றும் உணவு கூட ஊட்டி விடுகிறேன்.. 6ம் வகுப்புக்குப் போறான். வெளியே விளையாடப் போறதில்லை. வீட்டுக்குள் செல்போனும் கையுமா இருக்கான்… ஏதாச்சும் கேட்டா கோபப்படுறான்’ என்று குற்றம் சொல்வதைக் கேட்க நேர்ந்தது. இதுபோன்று குறை சொல்வது பெரும்பாலான வீடுகளில் சகஜமாகிவிட்டது.

குறிப்பாக வீட்டு வேலைகளில் பிள்ளைகள் கொஞ்சமும் அக்கறை காட்டுவதே இல்லை. சொல்லப்போனால் டீ குடித்த கப், சாப்பிட்ட தட்டை கொண்டுபோய் கழுவ வைப்பதையே பெரிய வேலையாக நினைக்கிறார்கள். லீவு விட்டாலும் ஸ்மிம்மிங் கிளாஸ், கராத்தே கிளாஸ் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கு விரும்புவதில்லை.

இதுகுறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா..?

வீட்டில் உள்ள விஷயங்களை, வேலைகளை சமாளிக்கத் தெரியாமல் வளரும் குழந்தைகளால் எதிர்காலத்தில் ஊரிலும், நாட்டிலும் ஏற்படும் சிரமங்களையும், சிக்கல்களையும் சந்தித்து வெற்றிபெறவே முடியாது.

ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நடத்திய மானுடர்களுக்கான மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றான Harvard Grant Study எனும் ஆய்வில், குழந்தைகளை அன்றாட வீட்டுப் பணிகளில் இருந்து விலக்கி வைப்பது பெரும் அபத்தம் எனவும், இதனால் அவர்களது பலவகையான ஆற்றல்களின் ஆக்கங்கள் குறைபடும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளது. 

மேலும், படிப்பு, கற்றல், போட்டித் தேர்வு, தரவரிசை, மதிப்பெண், மதிப்பீடு, பல்வேறு கலை கற்றல் இவை அனைத்திற்கும் தேவைப்படும் ஆக்கமும், ஊக்கமும், மன தைரியமும், நம்பிக்கை தூண்டலும் வெற்றி, தோல்விகளைப் பகுத்தறியும் பக்குவமும், உடனிருப்போருடன் உறவாடும் உளவியலும், நிச்சயமாக வீட்டில் நடத்திடும் நடத்தைகளே தீர்மானிக்கும் என்கிறது இந்த ஆய்வு..!

மாறாக, சிறு வேலைகளைக் கூட செய்திட முடியாத குழந்தைகளை, செய்ய அனுமதிக்காத பெற்றோர்களை இந்த ஆய்வு எச்சரிக்கிறது

இதன் அர்த்தம் என்னவென்றால், குழந்தைகளை வீட்டில் வேலைக்காரர்களாக மாற்றுவது அல்ல. வாழ்க்கையின் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு, குடும்ப வேலைகளில் பங்கெடுப்பது, அவர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியம் என்பதுதான்.

தினமும் பள்ளி செல்லும் குழந்தைகளானால், அவர்களது தண்ணீர் பாட்டிலை அவர்களே நிரப்பச் செய்யுங்கள், அவர்களின் உணவுத்  தட்டை  அவர்களே எடுத்து வந்து உணவை வாங்கி, தானாக உண்ணச் செய்யுங்கள். அவர்கள் தலை சீவுவது, காலணி அணிவது, அதற்கான பாலிஷ் போடுவது, வார விடுமுறைகளில், வீட்டின் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்தல், செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல், கார் (அ) பைக் கழுவ உதவுதல், படுக்கை உறை மாற்றுதல், வாஷிங் மெசினில் அவர்கள் துணிகளை எடுத்துப் போடுதல், வெயிலில் காய்ந்த துணிகளை மடித்து வைத்தல், சமையலுக்குக் காய்கறி கழுவுதல், குளிர்சாதனப் பெட்டியைச் சுத்தம் செய்தல், சமையலறைப் பொருட்களை அடுக்குதல், என சின்னச் சின்ன வேலைகளை வாரக் கடமையாக்கிடுங்கள்.

இதில் ஆண் பிள்ளை என்றும் பெண் பிள்ளை என்றும் பிரிவினை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், இன்று தனியே சென்று படிக்கவும், வேலை செய்யவும் வேண்டிய சூழல் ஆணுக்கும் பெண்ணுக்கும் வரலாம். அந்த நேரத்தில் தடுமாறுவது சிக்கலாக மாறிவிடும். எனவே கொஞ்சமேனும் வீட்டு வேலைகள் அறிந்திந்ருந்தால், இந்த சூழலை சிறப்பாக சமாளிக்க முடியும்.

மேலும், பிள்ளைகளுக்கு பணத்தின் அருமையையும், அதைச் சேமிப்பதையும் உணர வைக்கும். அவர்கள் விரும்பும்படி ஏதேனும் ஓர் ஹாபி அமைத்துக் கொடுக்கலாம். அதாவது மீன் தொட்டி, பறவை, நாய்க்குட்டி, புறாக்கள், பூச்செடி  கொடிகள் ஆகியவற்றைப் பராமரிக்கச் செய்யுங்கள்..

முடிந்தவரை, வீட்டில் இருக்கும் நேரங்களில்.. தொலைக்காட்சி, கணினி விளையாட்டுக்கள், திரைப்படங்கள், உணவக உணவுகள் என அவர்களின் எண்ணங்களை, செயற்கையான விசயத்திலிருந்து வெளிக்கொணர்ந்து, இயல்பான நம் அன்றாட தினசரி வேலைகளில் ஈடுபடச் செய்யுங்கள். உப்புமா, சோறு, சப்பாத்தி, சட்னி போன்ற சின்னச்சின்ன விஷயங்கள் செய்வதற்கும் சொல்லிக் கொடுங்கள்.

இன்று பல கல்லூரி மாணவர்கள், அதிலும் முக்கியமாக மருத்துவம் பயிலும் மாணாக்கர் கூட தற்கொலை வரை சுலபமாக முடிவெடுப்பதற்கு  மிக முக்கிய காரணம், தம்மையும், தம் சுற்றத்தையும் அனுசரித்துப் போகும் தன்மை அறியாததுதான்.

எனவே, குழந்தைகள் ஒன்றும் வீட்டில் வளர்க்கும் ஆர்க்கிட் பூச்செடி அல்ல.. பொத்திப் பொத்தி, உரம் போட்டு, நீர் ஊற்றி வளர்க்க. இவை சிறு வெப்ப நிலை மாறினாலும் அது வாடிப்போய் இறந்துவிடும்

மாறாக, அவர்கள் காட்டு மரங்கள்போல் வளர்ந்திட வேண்டும். முறையான வழிகாட்டுதலும் ,அரவணைப்பும் , அக்கறையும் மட்டுமே இருத்தல் வேண்டும். உங்கள் பெற்றோரிடம் அவர்களை ஒருங்கிணையுங்கள். வாழ்க்கையின் யதார்த்தங்களைக் கற்றுக் கொள்வார்கள். ஒழுக்கத்தையும் தைரியத்தையும் ஒருங்கே பெறுவார்கள்.

அதீத ஆர்வமும், தேவையற்ற கரிசனையும், எல்லை மீறிய அன்பும், பாராட்டுதலும் அவர்களுக்கு நிச்சயமாக நல்லது அல்ல.. சிறு சிறு விசயத்தை நளினமாகக் கையாண்டு, எளிமையாகச் செய்து முடிக்கும் பழக்க வழக்கம் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு வழிவகுக்கும்.

வீட்டில் வேலை கற்றுக்கொள்ளும் குழந்தை, நாளை உலகையே வெல்லும்.