மருத்துவத்தில் பஞ்சபூதம்..!

Image

ஆயுர்வேத ரகசியம்



இன்றைய மருத்துவத் துறையில் ஒரு தனித்தன்மை வாய்ந்த இன்றியமையாத பிரிவாக இருப்பது ஆயுர்வேதம்.  உடல்நிலைக்கு ஏற்ப கண்டறியப்பட்ட நோயின் அடிப்படையில் வாதம், பித்தம், கபம், ஆகியவற்றை சமநிலையில் வைப்பதற்கான ஒரு முழுமையான இயற்கை மருத்துவமே ஆயுர்வேதமாகும். இந்த சிகிச்சை முறை கிமு 600ம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றியது. இந்த புதியமுறை மருத்துவம் உடலில் ஏற்படும் நோய்களைத் தடுப்பதோடு குணப்படுத்தவும் செய்கிறது. ஆயுர்வேதம் என்ற சொல்லுக்கு தமிழ் அகராதிகள் மருத்துவக் கலை என்று பொருள் கூறுகிறது.


இந்திய மருத்துவ நடைமுறைகள் குறித்த மிகப் பழைய நூல்கள் வேதகாலத்தில் தோன்றின. குறிப்பாக அதர்வண வேதத்தில் ஓர் உட்பிரிவாக அடங்கியிருக்கிறது ஆயுர்வேதம். இந்தியாவில் புராதன காலத்தில் வாழ்ந்த சரகர், சுஸ்ருதர் ஆகிய முனிவர்கள் ஆயுர்வேத மருத்துவமுறையின் தலைச்சிறந்து விளங்கியவர்கள் என்று கூறப்படுகிறது. நிலம். நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பொருட்களாலேயே மனித உடல் உள்ளிட்ட அண்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்னும் கருத்தையே ஆயுர்வேதம் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இப்படி நீண்டகால வரலாறு கொண்ட இந்த மருத்துவ முறை இந்தியாவில் மட்டுமல்லாமல், தெற்காசிய நாடுகளிலும் செல்வாக்குப் பெற்றதாக இருந்தது. ஆனால் நம் நாட்டில் பிரிட்டிஷ்காரர்கள் வருகைக்குப் பிறகுதான் ஆயுர்வேத மருத்துவம், தன் செல்வாக்கை இழந்தது. இயற்கையோடு இணைந்த பாரம்பர்ய மருத்துவ முறையான ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக `ஆயுஷ்’ என்ற பெயரில் புதிய அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆயுர்வேதம் மூலம் பாதிக்கப்பட்ட உடம்பிற்கு மட்டுமல்லாமல் முழு உடலுக்கும் சிகிச்சை அளிக்க முடியும். இயற்கையான வழியில் புத்துணர்ச்சி ஊட்டுவதற்கும் உடலிலிருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்றி அதன்மூலம் நிலையான எதிர்ப்பாற்றலையும் நல்ல ஆரோக்கியத்தையும் உருவாக்கவும் இது உதவுகிறது. கேரளாவின் சமச்சீரான காலநிலை, இயற்கை வளங்கள் நிறைந்த காடுகள் மற்றும் ஈரமான காலநிலை ஆகியவை ஆயுர்வேதத்தின் குணப்படுத்தும் மற்றும் ஆரோக்கியம் தரும் செயலுக்கு ஏற்றதாக உள்ளன. உண்மையில் இன்று இந்தியாவில் கேரளாவில் மட்டுமே இம்மருத்துவ முறை முழு அர்ப்பணிப்புடன் நடைபெற்று வருகிறது.


மனிதன் உண்ணும் உணவில் குறை, மனத் தடுமாற்றம், அசுத்தம், பழக்கவழக்கம் இவற்றால் நோய் ஏற்படுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இந்த மருத்துவமுறையின் நோக்கம் உடலிலுள்ள நச்சுத்தன்மைகளைப் போக்குவதாகும். பொழுது விடியும் முன் எழுதல், முறையாகக் காலைக்கடன் முடித்தல், பல் முதல் உடல் உறுப்புகளைச் சுத்தமாக வைத்திருத்தல், ஆசனம், பிராணயாமம் செய்தல் ஆகியவை இம்மருத்துவச் சிகிச்சையின்போது கடைப்பிடிக்க வேண்டியவை ஆகும்.

ஆயுர்வேதம், உடலுக்கு புத்துணர்வூட்டி, மனத் தெளிவையும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும்  அதிகரிக்கச் செய்கிறது. தலை மற்றும் முகத்திற்கான மருத்துவ எண்ணெய் மற்றும் கிரீம்களோடு கூடிய மசாஜ், கை, பாதம் போன்றவற்றில் மூலிகை எண்ணெய் மற்றும் தூளோடு கூடிய மசாஜ், புத்துணர்ச்சிக்காக உள் கொடுக்கப்படும் மருந்துகள், மருந்தேற்றப்பட்ட நீராவிக் குளியல் போன்றவை இதில் அடங்கும்.

மூலிகைக் குளியல்களும்கூட பயன்படுத்தப்படுகின்றன. மருந்தேற்றப்பட்ட நீராவி குளியல் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றி தோலை மினுமினுப்படையவும் தோல் நிறைந்த மேம்படுத்தவும் செய்வதோடு உடல் கொழுப்பையும் குறைக்கிறது. மேலும் இது சில மூட்டு வலி நோய்களுக்கும் குறிப்பாக வலிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

மருந்து எண்ணெய் மற்றும் மூலிகைத்தூள் கொண்டு கைகளுக்கு மசாஜ் கொடுக்கப்படுவதால் அது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு தசைகளில் மினுமினுப்பை ஏற்படுத்துகிறது. மூலிகை முகப்பூச்சு, மூலிகை எண்ணெய் மசாஜ், மூலிகை தேநீர் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவை நிறத்தைக் கூட்டி உடலுக்கு அழகு தரும்.

Leave a Comment