காங்கிரீட் சாலைக்கு எதிர்ப்பு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 236

சென்னையில் தார்ச்சாலைகளுக்குப் பதிலாக காங்கிரீட் சாலைகள் அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி. பேருந்து சாலைகள் அனைத்தும் காங்கிரீட் சாலைகளாக மாற்றப்படும் பட்சத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடிக்கும் என்பதுடன் சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்துபோகும் என்று கணக்குப் போட்டார்.

காங்கிரீட் சாலைகள் அமைக்கும் செலவு கொஞ்சம் அதிகம் என்றாலும் தாக்குப்பிடிக்கும் காலத்துடன் ஒப்பிடுகையில் நிறைய பணம் மிச்சமாகும் என்று போன்ற சாதக அம்சங்களை எல்லாம் ஆராய்ந்து, அத்தனை பேருந்து சாலைகளையும் காங்கிரீட் சாலைகளாக மாற்றம் செய்வதற்கு விரும்பினார். ஆனால், சைதையின் விருப்பத்திற்கு ஏகப்பட்ட தடைகள் இருந்தன.

தார் சாலைகளுக்குப் பதிலாக காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டால் தங்கள் வருமான வாய்ப்பு பறி போய்விடும் என்று ஒப்பந்ததாரர்கள் பதறினார்கள். தார்ச் சாலை அடிக்கடி பழுதாவதால் மீண்டும் மீண்டும் போடப்பட்டு நிறைய பணம் பார்த்து வந்த அத்தனை பேரும் அலறினார்கள். அதனால் ஒவ்வொருவரும் கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு, காங்கிரீட் ரோடு போடக்கூடாது என்று பிரச்னை செய்தார்கள். தார் ரோடு போடுவதற்காக ஏராளமான மெஷின்களை வாங்கிவிட்டோம், இப்போது முழுமையாக அனைத்து ரோடுகளையும் காங்கிரீட் ரோடுகளாக மாற்றிவிட்டால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்று புலம்பினார்கள்.

அதோடு காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்படும், அடிக்கடி தோண்டப்படும் சூழல் ஏற்படும், செடி, மரங்கள் வளர்ப்பதற்கு முடியாது என்று பல்வேறு குற்றம், குறை சொன்னார்கள். அரசு பணத்தை கொள்ளை லாபம் அடிப்பதற்காகவே காங்கிரீட் ரோடுகளைத் தடுக்கிறார்கள் என்பது புரிந்தது. அதனால், முதலில் மாதிரி காங்கிரீட் சாலைகளை உருவாக்கினால் அதை பார்த்து மக்களிடமும் அதிகாரிகளிடமும் மாற்றம் வரும் என்ற முடிவுக்கு வந்தார். இதன் மூலம் அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் அரசியல் தலைவர்களையும் சமாதானப்படுத்த முடியும் என்று நம்பினார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment