அடடே, ஆச்சர்யக் குறிப்புகள்

Image

தகவல் களஞ்சியம் 6




பழங்களின் அரசன்!

 இந்தியாவின் மிக பழமையான பழங்களுள் ஒன்றான மாம்பழம்,  பழங்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர், வடகிழக்குப் பகுதியான மியான்மரில் உள்ள மலைப்பகுதிகளில் முதன்முதலில் மாம்பழம் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழில் ‘ஆம்-காய்’ என்று ஆகி, பின்னர் ‘மாம்-காய்’ என்று அழைக்கப்பட்டு, அதன் பின்னர் ‘மாங்காய்’ என மருவியது. போர்ச்சுகீசியர்கள், மாங்காய்க்கு, mango என்ற பெயரை வைத்து, அதனை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தினர்.   பழமையான இந்து புராணங்களில் மாம்பழம், சூரியக்கடவுளின் மகளாக நம்பப்படுகிறது. இந்தியாவைத் தவிர, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தேசிய பழமாக மாம்பழம் இருக்கிறது. சுவை மிகுந்தது என்றாலும், அதிகம் சாப்பிடுவது ஆபத்தை வரவழைக்கும்.

எடை குறைக்கும் மிளகு
உணவுப் பயன்பாட்டில் மிளகாய் வருவதற்குமுன், நம் நாட்டில் காரச்சுவைக்கு மிளகுதான்  பயன்படுத்தப்பட்டது.  சாதாரண மிளகு, வால் மிளகு என இதில் இரு வகைகள் இருந்தாலும், பெரும்பாலும் சாதாரண மிளகுதான் பயன்பாட்டில் உள்ளது. பதப்படுத்தும் முறையின் அடிப்படையில் கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என சில வகைகளும் உண்டு. மிளகு கொடி நான்கு மீட்டர் உயரம் வரை வளரும் ஒரு பல்லாண்டுத் தாவரமாகும். மிளகு கொடி தென்னை பாக்கு போன்ற மரங்கள் மீது படரும் தன்மையுடையது.

மிளகு உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது. இது வயிற்று பகுதிகளிலும், உடலில் உள்ள பிற பகுதிகளிலும் கொழுப்பு சேராமல், அவற்றை கரைக்க உதவுகின்றது. இதனால், உடல் எடை அதிகரிப்பதும் குறைந்து சீரான உடல் எடையைப் பெற உதவுகின்றது. சுவாச பிரச்சனைகள் ஏதாவது இருந்தால், அதனை போக்க மிளகு பெரிதும் உதவுகின்றது. மிளகு, சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளை போக்க உதவும் ஒரு முக்கிய மூலிகையாக செயல்படுகின்றது. மேலும் சுவாச குழாயில் இருக்கும் அடைப்பை போக்கி, சைனஸ் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க இது அதிக அளவு உதவுகின்றது.  இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள், நோய்களை எதிர்த்து போராட உதவுகின்றது. இதனால் நோய் பரவுவதும் குறைந்து, விரைவில் குணமடைய உதவுகின்றது. மேலும் தமனிகள் சுவற்றில் இருந்து கொழுப்பை அகற்றி சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றது.

ஒட்டகத்தின் மோப்ப சக்தி
ஒட்டகம், பெரும்பாலும் பாலைவனங்களில் வாழும் ஒரு  தாவர உண்ணி. இறைவனின் பரிசு என அழைக்கப்படும் ஒட்டகத்தின் எடை, சுமார் 250லிருந்து  750 கிலோ வரை இருக்கும். இதன் உயரம் 7 முதல் 8 அடிவரை இருக்கும்.  இவை  சராசரியாக 30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழும். பார்ப்பதற்கு சாதுவான விலங்காக இருந்தாலும் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டவை. 200 கிலோ வரையிலான எடையைச் சுமந்துகொண்டு 50 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கக்கூடியது. கொதிக்கும் மணலிலும் 50° செல்சியஸ் வெப்பத்திலும் உணவின்றி, நீரின்றி 8 நாட்கள் வரை இருக்கும். கடும் குளிர் காலத்தில் உணவின்றி, நீரின்றி ஆறுமாதம் வரைகூட இருக்கும். மேய்வதற்குப் புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால்கூட போதும், அடுத்த 10 மாதங்களுக்கு தேவையான அளவு சேமித்துக்கொள்ளும்.  நீர் அருந்தாமல் சில மாதங்கள் இருந்தாலும்,  மீண்டும் நீர் அருந்தும்போது ஒரே மூச்சில் 100 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும் குணம் கொண்டது.  இவ்வாறு நீரைக் குடித்தவுடன் 10 நிமிடங்களில் அதன் உடலில் தேவையான நீர்ச்சத்து பெற்றுவிடும். மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரைக்கூட தன் மோப்ப சக்தியால் அறிந்துகொள்ளும் சக்தி வாய்ந்தது.

தோல் வங்கிகள் ரெடி
மனித உறுப்புகளிலேயே மிகவும் பெரியது தோல்தான். மனித வாழ்நாளில் சுமார் ஆயிரம் முறை தோல் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. தோலின் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 1 கோடியே 90 லட்சம் செல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் தோலில் உள்ள பழைய செல்கள் உதிர்ந்தபடி இருக்கின்றன. நிமிடத்துக்கு சுமார் 40 ஆயிரம் செல்கள் இப்படி உதிர்கின்றன. சராசரியாக இவ்வாறு உதிரும் செல்களின் எடை, ஆண்டொன்றுக்கு 4 கிலோ வரை இருக்கும். அந்த வேகத்துக்கு இணையாகப் புது செல்களும் தோலில் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்ள தோல் உதவுகிறது. தோலில் உற்பத்தியாகும் வியர்வைக்கு மணம் கிடையாது. அதன்மீது பாக்டீரியாக்கள் வினைபுரியும்போது உருவாகும் பொருட்களே மணத்தைக் கொடுக்கின்றன. புற்றுநோய்களில் 50 சதவீதம் தோல் புற்றுநோய்தான். பெண்களைவிட ஆண்களுக்குத் தோல் புற்றுநோய் வரும் அபாயம் 2 மடங்கு அதிகம். தீ விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தோல் வங்கிகளும் உள்ளன. இந்தியாவில் மும்பை, பூனா ஆகிய இடங்களில் தோல் வங்கிகள் இருக்கின்றன. தோல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்தவர்களின் தோல், அவர்களின் இறப்புக்குப் பின் சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தி மற்றவர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. செயற்கைத் தோல் உருவாக்கவும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

Leave a Comment