ஒரு நேரம்… ஒரு வேலை..!

Image

கவனச்சிதறல் வேண்டாமே

ஏதேனும் ஒரு முக்கிய வேலையில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில், டிடிங் என்று சத்தத்துடன் விழும் ஒரு வாட்ஸ் ஆப் போஸ்ட், நம் கவனத்தை அப்படியே திசை திருப்பிவிடுவதுண்டு. வேலையைத் தொடர்வதா அல்லது வாட்ஸ் ஆப் பார்ப்பதா என்ற சில நொடி யோசனையில், கை தானாகவே செல்போனுக்குப் போய்விடும். அதன்பிறகு எப்போது மீண்டும் வேலைக்குத் திரும்புவோம் என்று சொல்லவே முடியாது.

இதுதான் கவனச்சிதறல்.

குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் மட்டுமே கவனத்தை செலுத்துபவர்களால் மட்டுமே எந்த ஒரு காரியத்தையும் கச்சிதமாக செய்துமுடிக்க முடியும். இந்த கவனச் சிதறல் காரணமாக அரை மணி நேரத்தில் முடிக்கவேண்டிய பணியை முடிக்க கூடுதலாக சில மணி நேரம் தேவைப்படுகிறது. அதனால், ஒட்டுமொத்த வேலைத்திறன் பாதிக்கப்படுகிறது.

எந்த ஒரு நேரத்திலும் ஏதேனும் ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவது என்பதில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். இன்று கார் ஓட்டும் நேரத்தில்கூட செல்போன் பார்ப்பதும், பேசுவதும், மெசேஜ் அனுப்புவதும் நடக்கிறது. அவரது அசட்டையால் விபத்து நேரும்போது, பாதிக்கப்படுவது அவர் மட்டுமல்ல, எந்த தவறும் செய்யாமல் அவருக்கு முன்னே, பின்னே பயணம் செய்தவர்களும் பெரும் ஆபத்தை சந்திக்கிறார்கள்.

எனவே, ஒரு வேலையில் இறங்குவதற்கு முன்பு, முழு கவனத்தையும் இந்த வேலையில் செலுத்தமுடியுமா என்பதை உறுதி செய்தபிறகே இறங்க வேண்டும். கொஞ்சநேரம் இணையத்தில் உலவ வேண்டும், யுடியூப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், முதலில் அவற்றை முடித்துவிட்டு அதன்பிறகு வேலையில் இறங்குவதே புத்திசாலித்தனம்.

அப்படி நினைத்துத்தான் வேலையில் இறங்குகிறேன், ஆனாலும் என்னால் முழு கவனத்துடன் செயலாற்ற முடியவில்லையே என்று கவலைப்படுகிறீர்களா..? கவனச் சிதறலைத் தடுக்க, கண்களை மூடி அமைதியாக சில நொடிகள், நிமிடங்கள் தியானம் செய்வது நல்ல பலன் தரும். இதன் மூலம் தேவையில்லாத சிந்தனைகளைக் குறைத்துவிடலாம். கொஞ்சநேரம் இணையம் பார்க்கவில்லை என்றால் எதுவும் ஆகிவிடாது என்று வைஃபை இணைப்பை துண்டித்துவிட்டு செயல்பட்டால் நிம்மதியாக செயலாற்ற முடியும்.

உங்கள் வேலை அல்லது செயல் பிறரது கவனத்தைக் கவரும் வகையில் சிறப்பாக அமையவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா..? அதற்கு மிகவும் எளியவழி, நீங்கள் கவனச்சிதறல் இல்லாமல், செய்யும் வேலையை திட்டமிட்டு செய்து முடிப்பதுதான். அதனால்தான் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுக் கூடத்தில் உணவு, தண்ணீர், தின்பண்டங்களைக்கூட அனுமதிப்பதில்லை.

ஒரு வேலையை முழு கவனம் கொடுத்து செய்து பாருங்கள். அதன் முடிவு நீங்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு அழகாக அமைந்துவிடும்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment